வாக்காலும்... தன்மையனை வாக்கு மனங்களாலும் ஒரு காலத்திலுந் தாக்காமல் அறிதற் கரிதாகிய தன்மை யுடையவனை ; நோக்கி விசாரித்துப் பார்த்து ; பிறித்து பகுக்கு மிடத்து ; அறிவு... கொடி அறிவுக்கறிவா யிருக்கிறதைப் பிரியாமற் குறித்து அருள் பொருந்தத்தக்கதாகக் கொடி கட்டினேன்.
வாக்கு மனங்களுக்கும் எட்டாமல் ஒரு காலத்திலுந் தாக்காமல் அறிதற்கரிதாகிய அறிவுக்கறிவாயிருக்கிற பொருளை இவனிடத்திலே பொருந்தத் தக்கதாகக் கொடி கட்டினேன்.
மனம் வாக்குக் காயங்களினாலே ஒருகாலுந் தாக்கா தவனென்றும் ஆன்மபோதத்தா லறியப்படாதவனென்றும் சொன்னதற்கு உம் : சித்தியாரில் (பாயி. 4) ‘மறையினா லயனால் மாலால்... கூறொணா தாகி நின்ற விறைவனா’ ரென்றும், சிவப்பிரகாசத்தில் (84) ‘பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும், ஈசனை யறிய வொண்ணா’ என்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. விசாரித்துப் பார்க்குமிடத்தில் என்றது இப்படி மனம் வாக்குக் காயங்களுக்கும் ஆன்மபோதத்துக்கும் எட்டாத சிவனை ஆசாரியர் தீடிக்ஷக்கிரமங்களினாலே மலமாயாதி கன்மங்களைப் போக்க பசு கரணங்களைச் சிவகரணமாக்கி மலத்திலே பற்றாக இருந்த அறிவைத் திருப்பி அருளிலே பற்றாக்கி என்றதற்கு உம் : நெஞ்சுவிடுதூதிலே (90) ‘பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம், நீத்தான் நினைவுவே றாக்கினான்’ என்பது கண்டுகொள்க. அறிவு தம்மிற் பிரியாமை தானே குறிக்கும் என்றது இப்படி மலங்களைப் போக்கி அறிவை அருளினாலே திருப்பின ஆசாரியர் அனுக்கிரகத்தினாலே ஞாதுரு ஞான ஞேயங்களாகிய சங்கற்பனை ஞானங்களிலே போகாமல் தன்னிடத்திலே உயிர்க்குயிராய் அநாதியே தோன்றாமற் பொருந்தியிருக்கிற திருவருளிலே அறிவு தாரகமாக நிறுத்தி என்றதற்கு உம் : சித்தியாரில் (11.2) ‘ஞாதுரு ஞான ஞேயந் தங்கிய ஞானஞ் சங்கற்பனை ஞான மாகுந், திருஞான மிவையெல்லாங் கடந்த சிவ ஞான மாதலாற் சீவன் முத்தர் சிவமேகண் டிருப்பர்’ என்பது கண்டுகொள்க. அருள் நல்கக் கொடி என்றது இப்படி ஆசாரியர் அனுக்கிரகம் பெற்ற அனுட்டானத்தினாலே சிவன் ஆன்மாவைக் கவளீகரித்துக் கொள்ளுவனென்றும் இந்த முறையிலே யல்லாமல் மோக்ஷம் அடையப்படாதென்றும் கொடிகட்டினோ மென்பது கருத்து. அருள் பொருந்து மென்றிருக்கச் சிவன் கவளீகரிப்பனென்று சொல்லுவானே னென்னில், அருளென்றும் சிவமென்றும் வேற்றுமையில்லை யென்றது. ஆன்மாவைச் சிவன் கவளீகரித்ததெப்படி யென்னில், ரசகுளிகை பொன்னைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டது போலவும் ; தானாக்கினது எப்படியென்னில், அக்கினி இரும்பைத் தானாக்கினது போலவும் ; சிவன் ஆன்மாவை வசித்து விடாதது எத்தன்மையென்னில், காந்தம் இரும்பை வசித்தால் ஒருகாலும் விடாது அத்தன்மைபோலவும் ; சிவன் ஆன்மாக்களுக்கு மலத்தைப் போக்கித் திருவடியிலே கூட்டினது எப்படியென்னில், அக்கினி காட்டத்தைக் கெடுத்தது போலவும் சூரியன் அந்தகாரத்தைப் போக்கினது போலவும் மலத்தைப் போக்கி உப்பை யணைந்த அப்பைப் போல ஒன்று பட்டுத் திருவடியிலே கலந்திருப்பது. ஆன்மா சிவனைப் பொருந்திச் சிவனாய் நீங்காமலிருக்கிறது எப்படி யென்னில், குளத்திலே கட்டுப்பட்ட தண்ணீர் அணையை முறித்துக்கொண்டு சமுத்திரத்திலே சேர்ந்தபோது அந்தச் சமுத்திர சலமேயாய் அந்தச் சமுத்திரத்தை விட்டு நீங்காத முறைமை போலவும் ஆன்மாச் சிவனைப் பொருந்திச் சிவமேயாய்ச் சிவனைவிட்டு நீங்காமல் சிவனுடைய திருவடியிற் கலந்து கிடக்கிறது இந்த முறைமைத்து. இதற்கு உம் : சித்தியாரில் (11.12) ‘இரும்பைக்... கலந்தே’ என்றும், சிவஞான போதத்தில் (11.4) ‘மன்னு மிருளை மதிதுரந்த’ என்ற பாடத்திலும், (11.5) ‘நசித்தொன்றி னுள்ளம்’ என்ற பாடத்திலும், (8.7) ‘சிறைசெய்ய நின்ற’ என்ற பாடத்திலும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க.