கருநிறம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய கறைக்கண்டர், கொன்றை மலர்களால் இயன்ற கண்ணி தார் ஆகியவற்றை அணிந்தவராய்க் குளிர்ந்த பிறைமதியை முடியில் சூடி, சிறப்புமிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்குரியவராய் வந்து ஊர்கள்தோறும் திரிந்து, பலியேற்று, என் மனத்தகத்தே கொடிய விரகவேதனையைத் தந்து சென்றார்.
பிச்சை ஏற்பார்போல் வந்து என் மனத்திற்குப் பெரு நோய் செய்தார் என்கின்றது. இதுவும் தலைவி கூற்று. தார் - மார்பின் மாலை. கண்ணி - தலையிற்சூடப்படும் மாலை. சேடர் - காதலால் தூது செல்லும் தோழர். உள் - மனம்.