அருள்மிகு பாலினுநன்மொழியாள் உடனுறை வாய்மூர்நாதர்
மரம்: பலா மரம்
குளம்: சூரியதீர்த்தம்
பதிகங்கள்: தளரிளவளரென -2 -111 திருஞானசம்பந்தர்
எங்கேஎன்னை -5 -50 திருநாவுக்கரசர்
பாடவடியார் -6 -77 திருநாவுக்கரசர்
முகவரி: திருவாய்மூர் அஞ்சல்
திருக்குவளை
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610204
இது திருக்குவளை என்று இக்காலம் வழங்கும். திருக் கோளிலிக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்றாகும். திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரணியம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.
இறைவர் திருப்பெயர் வாய்மூர்நாதர். இறைவியார் திருப்பெயர் பாலினுநன்மொழியாள்.
தீர்த்தம் சூரியதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் இருக்கிறது.
தலவிருட்சம் பலா.
விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் ஏழனுள் ஒன்று. இவர் நீலவிடங்கர், நடனம் கமலநடனம்.
சூரியன் பூசித்துப் பேறு பெற்றான்.
சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் திருமறைக் காட்டில் எழுந்தருளியிருந்தபொழுது வாய்மூர் இறைவர் அப்பர் கனவில் தோன்றி ``நாம் வாய்மூரில் இருப்போம் வா``என்றனர். உடனே அப்பர் விரைவில் எழுந்து இறைவரைத் தொடர்ந்து சென்றார். திருக்கோயிலுக்கு அருகில் சென்றதும் இறைவர் மறைந்துவிட்டனர்.
இதற்குள் ஞானசம்பந்தரும் அங்கு எழுந்தருள, அப்பர், ``கதவைத் திறக்கப்பாடிய என்னினும், செந்தமிழ் உறைக்கப் பாடி அதை அடைத்த ஞானசம்பந்தப் பெருந்தகையாரும் எழுந்தருளி யுள்ளார். அவர்க்குக் காட்சியை அளிக்கவாவது வெளிப்பட்டருள வெண்டும்`` என்றுபாட அவ்வாறே வாய்மூர் இறைவர் காட்சி தந்தருளினார்.
இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகங்கள் இரண்டு, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. சுந்தரரும் ``வாய்மூர் மணாளனை`` என்கின்றார்.