அருள்மிகு மலையான்மடந்தை உடனுறை நற்றுணையப்பர்
மரம்: வில்வம்
குளம்: சொர்ண தீர்த்தம்
பதிகங்கள்: காரைகள் -2 -84 திருஞானசம்பந்தர்
முற்றுணையாயி -4 -70 திருநாவுக்கரசர்
ஆதியன் -7 -97 சுந்தரர்
முகவரி: கிடாரங்கொண்டான் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609304
தொபே. 04364 283188
இது திருஞானசம்பந்த சுவாமிகளுடைய அருமைத் தாயாரின் பிறப்பகம். இது இக்காலம் புஞ்சை கடாரங்கொண்டான் என்று வழங்கப்பெறுகின்றது.
இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள 43-ஆவது தலமாகும். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
இறைவரின் திருப்பெயர் நற்றுணையப்பர். இறைவியாரின் திருப்பெயர் மலையான்மடந்தை. இத்தலம் முன் பாலைநிலமாய் இருந்தது. ஞானசம்பந்தப் பெருந்தகையார் இதை நெய்தல் நிலமாகுமாறு பாடினார். பின்னர் இதையே கானகமும் வயலுமாக ஆக்கினர். இச்செய்தி,
``நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே
போதின் மலிவயல் ஆக்கிய கோன்``
என்னும் பதினொன்றாந் திருமுறையிலுள்ள ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் (செய்யுள் 17) கூறப்பெற்றுள்ளது.
ஞானசம்பந்தர் பாலையை நெய்தலாகப்பாடியதை ``பாலை நெய்தல் பாடியதும்`` என்னும் திருக்களிற்றுப்படியார் பாடலாலும் அறியலாம். இக்கோயிலுக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று, சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. திருநாவுக்கரசு நாயனார் இக்கோயில் பதிகம் ஐந்தாம் திருப்பாட்டில் சமணர்கள், தமக்கு நஞ்சு கலந்த சோறு கொடுத்ததை,
``வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலாவமணர் தந்த
நஞ்சமுதாக்கு வித்தார் நனிபள்ளியடிகளாரே``
எனக் குறித்துள்ளார்கள்.