குபேரனுடைய நண்பனே! எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனே! சூலத்தைக் கையில் ஏந்தியவனே! என்றும் நிலை பெற்றிருப்பவனே! மங்களமான வடிவினனே! பொன் மயமான பெரிய தூண் போல்பவனே! கற்பக மரத்தின் கொழுந்தினை ஒப்பவனே! மூன்று கண்களை உடைய கரும்பு போன்ற இனியனே! பாவம் இல்லாதவனே! முருகனுக்கும் விநாயகனுக்கும் தந்தையே! பொன்னம்பலத்தில் தேவர்கள் தலைவனாக உள்ளவனே! உன் திருவடிகளை என் உள்ளத்தில் இனிமையாக அடியேன் அநுபவிக்குமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.
தனதன் - குபேரன். தாணு - நிலைபெற்றிருப்பவன். கனகநற் றூணே என்றதை, மாசொன்றில்லாப் - பொற்றூண்காண் (தி. 6. ப.8. பா.1) என்றதனோடு வைத்துக் காண்க. கொழுந்து - தளிர்; இஃது அழகு மிக்கதாய் இன்பம் தருவது. கண்கள் - கணுக்களைக் குறித்த சிலேடை. அனகன் - பாவம் இல்லாதவன்; என்றது. `வினைத் தொடக்கு இல்லாதவன்` என்றதாம். குமரன் - முருகன். `குமர விநாயகர்` என்னும் உயர்திணை உம்மைத் தொகை ஒரு சொல் லாய்ப்பின், சனகன் என்பதனோடு, நான்காவதன் தொகைபடத் தொக்கது. சனகன் - தந்தை. அமரர் சேகரன் - தேவர் கூட்டத்திற்கு மகுடம்போல விளங்குபவன். இஃது ஒருசொல் தன்மைப்பட்டு, `அம்பலத்து` என்றதனோடு தொகைச் சொல்லாயிற்று. `அமரசேகரன்` எனவும் பாடம் ஓதுப. `நின்` என்பது, திருமுறைகளில், `நுன்` என வருதலை அறிந்துகொள்க. நுகருமா நுகரே என்றது நுன என்றதற்குரிய மோனை நோக்கியாகலின், `உன கழலிணை` என்பது பாடம் ஆகாமை அறிக. இணை என்றமையின். இனிதா என ஒருமையாகக் கூறினார். நுகர்தல் - அநுபவித்தல்.