`தத்` என்ற சொல்லால் குறிக்கப்படும் மேம்பட்ட பொருளே! சந்திரனைச் சூடிய முடியினை உடையவனே! சாமவேதம் பாடும் குரல்வளையை உடையவனே! சிதாகாசத்தில் வாழ்கின்ற வனே! அங்கு மேம்பட்ட பரம்பொருளாய் இருப்பவனே! எனக்குத் தெரிந்த சொற்களைக்கொண்டு உன்னை என் நாவினால் புகழும்படி என் சிறிய உள்ளத்தில் எல்லை காணமுடியாத உன்னைத் தங்கச் செய் துள்ள பொன்னம்பலத்துக் கூத்தாடும் அரசே! ஊழிக் காலங்களாக வும், அந்தக் கால எல்லைக்குள் தோன்றி மறையும் பொருள்களாக வும், அவற்றின் வேறுபட்டவனாகவும் உள்ள உன்னைத் தொண்ட னாகிய நான் தியானிக்குமாறு என்திறத்து நீ செயற் படுவாயாக!
தத் பரம்பொருள் - வேதத்துள், `தத்` என்னும் சொல்லால் குறிக்கப்படும் பரம்பொருள். `தன் பரம்` எனப் பிரித்து, தனக்கு மேலான - உணர்கின்ற பொருட்கு (உயிர்கட்கு) மேலாய பொருள் என உரைத்தலும் உண்டு. சசிகண்டன் - நிலாத் துண்டத்தை யணிந்தவன். இப்பெயர் விளியேற்றது - சீகண்டன் என்பது முதல்குறுகி, விளியேற்றது. சிகண்டம், முடி என்பாரும் உளர். சாமகண்டன் - கருமையான கழுத்தை உடையவன் `சாமவேதம் முழங்கும் குரலை உடையவன்` என்றலும் உண்டு. அண்டம் என்றது, சிதாகாசத்தை. நற்பெரும்பொருள் என்றதில், பொருள், சொற்பொருள். உரைகலந்து - எனது சொல்லிற்சேர்த்து. அற்பன் - சிறியன். கற்பம் - ஊழிக்காலம். உலகு - அக்கால எல்லைக்குள் தோன்றி நின்று ஒடுங்கும் பொருள்கள்.