என்னுடைய துயரங்களைப் போக்கி என்னை அடியவனாக ஏற்றுக்கொண்டு, என் உள்ளத்தில் உள்ள அறியாமையைச் செய்யும் ஆணவமலத்தை அடியோடு போக்குதலால் வெளிப்பட்டு விளங்கும் தூய்மையான அழகிய விளக்குப் போன்ற ஆன்ம அறிவினுள் ஒளிமயமாகக் காட்சி வழங்கும் மேம்பட்ட சோதியே! பகைவர்களை அழிக்கும் காளையை வாகனமாக உடையவனே! பொன்னம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! பிரமனும் திருமாலும் உன் உண்மை உருவத்தை அறியமுடியாதபடி எங்கும் பரவும் ஒளியைப் பரவச்செய்து எல்லா இடங்களிலும் வியாபித்து நிற்கும் உன்னை உன் அடியவனாகிய நான் வணங்கும்படியாக நீ திருவுள்ளம் கொண்டு செயற்படுவாயாக.
இருட்பிழம்பு என்றது, அறியாமையைச் செய்யும் ஆணவ மலத்தை. சுடர்மணி விளக்கு என்றது, அம்மலத்தின் நீங்கி விளங்கும் ஆன்ம அறிவினை. தூயநற் சோதி எனப்பட்டதும் அதுவே. `ஒளியாய்` என ஆக்கம் வருவிக்க. சோதியுட் சோதி என்றது, வாளா பெயராய் நின்றது. எனவே, `சுடர்மணி விளக்கினுள் ஒளி விளங்கும்` என்றது, இப்பெயர்ப் பொருளை விரித்தவாறாம். பரஞ்சுடர்ச் - சோதியுட் சோதி யாய்நின்ற சோதியே (தி.5. ப.97. பா.3) என்றும், சோதியாய் எழும் சோதியுட் சோதிய (தி.12. தடுத் - 192) என்றும் வருவனவற்றால், இறைவன், `சோதியுட் சோதி` எனப்படுதல் அறிக. `எறிந்து விளங்கும் சோதி` என முடிக்க. அடல் - வலிமை. பாகன் - நடத்துபவன்.
அறியாமை - அறியாதபடி. `அறியாமை நின்றாயை` என இயையும்.