வேதங்களும், தேவர்கள் குழாமும், பிரமனும், திருமாலோடு உள்ளம் மயங்கித் தம் முயற்சியால் உன்னை அறிய இயலாமல் தாம் உன்னை வழிபடும் முறையாலே பலவாறு வேண்டி யும் உன்னை உள்ளவாறு அறியமாட்டதவராய் இருப்பவும், அறிவற்ற வனாகிய அடியேன் சொல்லிய இந்த அற்பமான சொற்களை, வீரக்கழல்கள் ஒலிக்கும் திருவடிகளை உடைய உன் சிறப்புக்களைச் சிறிதும் அறியாது இகழ்ந்து உரைக்கின்ற கொடிய சொற்களைப் பொறுக்கும் உனக்கு, பொறுத்துக்கொள்ளுதல் இயல்பாக உள்ளது. அத்தகைய, அம்பலத்துள் நிறைந்து காணப்படும் கருணைக்கு இருப்பிடமானவனே! உன்னை உன் தொண்டனாகிய அடியேன் விருப்புற்று நினைக்குமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.
குறிப்புரை :
ஓர்வரியாய் எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, மாட்டாது என்றார். முறை முறை என்ற அடுக்கு, பன்மை பற்றி வந்தது. முறையிட்டும் என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலா யிற்று. `ஓர்ப்பரியாயை` என்பதும் பாடம். அரன் என முன்னிலையிற் படர்க்கை வந்தது. அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையிற் பொறுக்கும் என்றது, `உனது பெருமையைச் சிறிதும் அறியாது இகழும் அறிவிலிகளது இகழுரையைப் பொறுத்துக் கொள்ளுதல் போலப் பொறுத்துக் கொள்கின்ற` என்றபடி. வெறுமை- அறிவின்மை. சிறுமை - இகழ்ச்சி. இவ்விரண்டும் ஆகுபெயர்களாய் அவற்றை உடைய மக்கள்மேலும், சொற்கள்மேலும் நின்றன. `சிறிதும் அறியாது இகழ்ந்துரைக்கின்ற வன் சொற்களைப் பொறுப்பவனுக்குச் சிறிது அறிந்து புகழ்கின்ற புன் சொல்லைப் பொறுத்தல் இயல்பே என்றற்கு அவ்வன்சொற் பொறுத்தலை உவமையாக்கினார். `பொறுக்கும் கருணாநிலயமே` என இயையும். நிலயம் - இருப்பிடம். இறுதித் திருப்பாட்டுக்களில் தம்மைப்பற்றிக் குறிக்கின்ற இவ்வாசிரியர், அவற்றைத் திருக்கடைக்காப்பாக அருளாது, தமது பாடலை இறைவன் ஏற்றருள வேண்டிக் கூறுகின்றார்.
ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
English / ஆங்கிலம்
Vedas, Devas acrowding with fair Maal and Brahma
Are inebriate. In repeated pleading, they tried
To grasp you. While such are they, I, your trivial,
Vassal have versed in words vain that not see
Your sounding Kazhal-feet. May you brook
My vacuous hollowness. O, abode of Mercy
Granting full in spatium! May you will it so
I your servient one deliberate on your will!