அறிவை அழித்துக்கொண்ட மாந்தர்களே, பொருளைத்தேடி, உழக்கரிசியை அட்டு உண்ணுதல் ஒன்றைச் செய்து விட்டு, எஞ்சியவற்றைத் தொகுத்துவைத்துப் பின் இழந்து போவாரும் சிலர் இவ்வுலகில் உளர் ; அவர்கள், ` அறம் ` என்றாலோ, ` அஃது எமக்கு வேண்டா ; யாம் உண்டு உயிர் வாழ்வேம் ` என்று போவர். வஞ்சனையால் தம் வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொள்கின்ற அவர் களோடு கூடி, அவர்களது நோன்பாகிய அச்செயலை நீவிர் செய்யன் மின் ; விடியற்காலையில் பகலவன் வருகையை எதிர்நோக்கி நின்று, மந்திர நீரை இறைத்துக் காலைச் சந்தியை முடிக்கின்றவர்கள் வணங்கு கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.
உழக்கு, நாழியின் நாற்கூற்றில் ஒருகூறு. ` உண்பது நாழி ` என்றும், ` நாழி யரிசிக்கே நாம் ` என்றும் ( நல்வழி ) மக்கள்தம் உணவளவு கூறப்படுமாகலின், ` உழக்கு ` என்றது அவர் தம் உண்ணுதற் செயலின் இழிபு தோற்றிற்று என்க. ஏகாரம், செயற்பாலன வாய பிற செயல்களின் நின்று பிரித்தலின், பிரிநிலை. ` படைத்து ` என்றதனை முதற்கண் வைத்து உரைக்க. படைத்தல் - உளவாக்குதல். ` வழக்கு ` என்பது, ` அறிந்தார்க்கு உரிய முறைமை ` என்னும் பொருள தாய், அறத்தைக் குறித்தது. மாந்துதல் - குடித்தல் ; ` அறிவைக் குடித்த ` என்றது, பான்மை வழக்கு, ` மாந்தர் ` என்றது விளி. ` சழக்கு ` என்றது, இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லிக் கரத்தலை. ` பிழைக்கே யென்பர் ` என்பதும் பாடம்.