உலகீர், பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; அதன் பொருட்டு, நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள் ; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும், மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும், வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.
முதற்கண் வந்த, ` ஆவது ` என்பது, எழுவாய்ப்பொருள் தருவதோர் இடைச்சொல்.
` போவது ` என்றது, ` போகவேண்டுவது ` எனப் பொருள் தந்தது. பறி - பை ; அது பை போல்வதாகிய உடம்பைக் குறித்தது. அதனை வருகின்ற திருப்பாடலிலுங்காண்க. ` பறிதான் வாழ்வாவது ` என மேலே கூட்டுக. ` தான் ` என்பது, அசைநிலை.