பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
`ஊன்` என்றதும், ஆகுபெயராய், உடம்பையே குறித்து நின்றது. `ஊன் ஆய்` எனப் பிரித்து, உயிருக்கு அடையாக்குக. இவ்வாறன்றி, `ஊன்` என்றது பொதுமையில் நின்று, சத்ததாதுக்களை உணர்த்திற்று என்றலுமாம். வானமும் நிலமுமாயினமையை அருளவே, இடைநின்ற ஏனைய பூதங்களாயினமையும் கொள்ளப் படும். இங்ஙனம் எல்லாமாய் நின்றமையை ஓதியது, `எல்லாவற்றையும் உடைய பெரியோனாகிய உனக்கு ஆளாதலினும் சிறந்த பேறு ஒன்று உளதோ! அப்பேறு எனக்குக் கிடைத்திருக்கவும், அதன் பெருமையறியாது இகழ்ந்தமை பொருந்துமோ` என்பதைத் தெரிவித்தற் பொருட்டாம். `ஆனாய்` என்றது, என்றும் உறைதலை அருத்தாபத்தி யான் உணர்த்திற்று.`பொருந்தினவனே` என்றும் ஆம். இனி, `ஆனாய்` என்பதற்கு, `இடப வாகனத்தை உடையவனே` என்றும் உரைப்பர்.