தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
`திருமேனி` என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது. `மண்ணுதல்` என்பது, முதனிலைத் தொழிற்பெயராய், `மண்` என நின்றது. இவ்வாறன்றி, `நிலத்தின்கண் நிறைந்த ` என்று உரைத்தலும் ஆம். `அண்ணால்` என்பது, `அண்ணா` என மருவிற்று.