மலையரசன் மகளாகிய பார்வதியொடு மகா தேவன் மகிழ்ந்துறையும் மறைக்காடு, வளப்பம் மிக்க சோலைகள் சூழ்ந்த தலைச்சங்காடு, தலையாலங்காடு, பரந்த கடலால் சூழப் பட்டதும், அழகியதும், குளிர்ந்ததுமாகிய சாய்க்காடு, மோதித்தள்ளும் நீரையுடைய கொள்ளிக்காடு, பலரும் புகழும் பழையனூர் ஆலங்காடு, பனங்காடு, பாவை போன்ற பெண்கள் தங்கள் பாவம் நீங்குதற்காக விலை ஏறப்பெற்ற தம் வளையல்கள் கலந்து ஒலிக்கும்படி ஆடும் பொய்கைகளை உடைய வெண்காடு ஆகியவற்றை அடைந்து வணங்க வினைகள் விட்டு நீங்கும்.
இத் திருத்தாண்டகம், ` காடு ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது.
சாய்க்காடு, கொள்ளிக்காடு இவை சோழநாட்டுத் தலங்கள். பனங்காடு, வைப்புத் தலம்.
மறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, ஆலங்காடு, வெண்காடு இவை மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன. பழையனூர், ஆலங்காட்டிற்குச் சார்பாய் உள்ளது. விலை ஆடும் வளை - விலை ஏறப்பெற்ற வளையல்கள்.