நீர்ப்பெருக்கினை உடைய கங்கையாற்றைச் சடையிலணிந்த சிவபெருமான் திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன், கடம்பூர் கரக்கோயில், மணங்கமழும் பொழில்கள் சூழ்ந்த ஞாழற்கோயில், கருப்பறியலூரில் மலைபோன்று விளங்கும் கொகுடிக்கோயில், அந்தணர்கள் வேதம் ஓதி வழிபாடு செய்து துதிக்கும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயிலாகிய திருக் கோயில், என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்து படிமீது வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும் தீரும்.
இத் திருத்தாண்டகம், ` கோயில் ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது.
பிற்காலத்தில், ` தஞ்சைப் பெருங்கோயில் ` என்பதுபோல, அக்காலத்தில், ` பெருங்கோயில் ` என எழுபத்தெட்டுக் கோயில்கள் இருந்திருத்தல்வேண்டும். ` அம்பர்ப் பெருங்கோயில் ` என்பது ஒன்று திருப்பதிகத்தாற்றானே காணப்படுகின்றது. இனி, ` பெருங்கோயில் எழுபதினோடு எட்டு ` என்று அருளப்பட்டவை கோச்செங்கட்சோழ நாயனாரால் எடுக்கப்பட்ட கோயில்கள் ` என்றலும் பொருந்தும்.
` கரக்கோயில் ` என்பது, கடம்பூர்க்கோயில் ; ` கொகுடிக் கோயில் ` என்பது கருப்பறியலூர்க்கோயில் ; இவை சோழ நாட்டில் உள்ளவை. ` கரக்கோயில் ` என்பது, ` இந்திரன் கரத்தால் அகழ்ந்த கோயில் ` எனவும், ` கொகுடி ` என்பது ` ` முல்லைக் கொடியின் வகை ` எனவும் கூறுவர்.
இளங்கோயிலும், ஆலக்கோயிலும் மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன.
ஞாழற் கோயில், மணிக் கோயில் இவை வைப்புத் தலங்கள்.
இருக்கு - வேதம் ; மந்திரமுமாம். ` திருக்கோயிலாகிய, சிவன் உறையும் கோயில் ` என்க. இதனால், இத்திருப்பெயர் சிவன் கோயிலுக்கே உரித்தாதல் அறிக. இவ்வாறாகவே, ` திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் ` ( தி.6. ப.95. பா.5.) ` திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனி தன்னை ` ( சிவஞான சித்தி. சூ. 12-4) என்றவற்றின் பொருள் இனிது உணர்ந்து கொள்ளப்படும். சூழ்தல் - வலம் வருதல்.