மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி, வருந்தி அழியுமாறு சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, மது நிறைந்து மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி, மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன் பள்ளி, செழிப்புமிக்க நனிபள்ளி, தவப்பள்ளி புகழ்பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமைமிகக் காப்பாராவார்.
இத்திருத்தாண்டகம், ` பள்ளி ` எனவருவனவற்றை வகுத்தருளிச்செய்தது.
சக்கரப்பள்ளி, நனிபள்ளி சோழநாட்டுத் தலங்கள். காட்டுப் பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன் பள்ளி, கொல்லியறைப் பள்ளி மேலைத் திருப்பதிகத்துட் கூறப்பட்டன. ` சிராப் பள்ளி ` என்பது எதுகை நோக்கிக் குறுகிற்று.
பொருப் பள்ளி, சிவப் பள்ளி, தவப் பள்ளி, பரப்பள்ளி இவை வைப்புத் தலங்கள்.
வரை - மலை. புலந்து அழிய - பகைத்து அழிய. பொன் - அழகு. கள் ஆர் - தேன் நிறைந்த. ` கலவச் சாரல் ` என்பது மெலித்த லாயிற்று. கலவம் - மயில். ` பரலோகத்து ` என்புழி, இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. பாலிப்பார் - காப்பார் ; ஆளுவார்.