ஞானிகளும் தேவர்களும் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது தில்லைச் சிற்றம்பலம் ; சிட்டர்களாகிய அந்தணர்கள் வாழ்தற்கு இடமாவது அது. அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடியருளும் ஞான மூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அச்சிட்டர்களாய மெய்ஞ்ஞானியரையே, ஏனையோரைச் செறுதற்கு வல்ல காலன் அணுக மாட்டான்.
சிட்டர் - அறிவர் ; ஞானியர் ; தில்லைவாழந்தணர். சிட்டன் - ஞானமூர்த்தியாகிய நடராசப்பெருமான். சிட்டன், சிரேஷ்டன், சிஷ்டாசாரமுடையவன் என்பாரும் உளர்.