இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கவல்ல சதுரப்பாடுடையவன் ; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன். இப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலையை அசையும்படி, செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணனுடைய பத்து முடிகளும் வருந்தும்படி மெள்ள ஊன்றும் செம்மையான திருவடியைச் சென்று கை தொழுது உய்க.
மதுரம் - இனிமை. சர்வசங்கார காலத்துப் பெருமானது சினத்தைத் தணித்து மீண்டும் படைத்தற்றொழிலைச் செய்யவல்ல மொழியுடையாள் ஆதலின் ` மதுரவாய்மொழி மங்கை ` என்றார். பங்கு - இடப்பாகம். செம்பாதியும் கொண்டதையல் ( முத்துக் -. பிள்ளை. ) சதுரன் - சதுரப்பாடு உடையவன். ` பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத இன்பம், ஆவண்ணம் மெய்கொண்டவன் தன் வலியாணைதாங்கி, மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்யவாளா மேவு அண்ணல் ` ( திருவிளையாடல் ) ஆதலின் சதுரன் என்றார். திருமலை - கயிலைமலை. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறித்தலைப் போலத் திருமலை என்பது கயிலையைக் குறிக்கும். அதிர - நடுக்கத்தால் அதிர்ச்சியடைய, ஆர்த்து - ஆணவத்தால் செருக்கி ஆர வாரித்து. மிதிகொள் சேவடி - மிதித்தலைக் கொண்ட எனவும் மிதித்து மீள அருள் செய்துகொண்ட எனவும் இருபொருள் பட நின்றது.