மதியின் கூறாகிய பிறையை அணிந்த நீண்ட சடையனே ! பெரிய காஞ்சி மாநகரில் உள்ளாயாய்த் தலைக்கோலம் என்ற அணியை அணிந்தவனே ! நாளும் ஆயிரம் பூக்களால் இண்டை மாலை தொடுத்துச் சிவபெருமானுக்கு அணிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து நாள்தோறும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் வரிசை அமைய இண்டை மாலையைத் தொடுக்கின்ற திரு மாலுடைய மனநிறைவை அழிப்பவன் போல நீலகண்டனாகிய நீ ஒரு பூவைக் குறையச் செய்து அப்பூவின் தானத்தில் செந்தாமரை போன்ற தன் கண்ணை இடந்து அவன் பூவாகத் தொடுப்பதற்காக அவன் கண் ஒன்றனைத் தோண்டி எடுக்குமாறு செய்தாயே.
பிறைத்துண்டம் - ` நிலாத் திங்கட்டுண்டம் `. இக் காலத்தில் அப் பெருங் காஞ்சித் திருவேகம்பத்துள் வடகீழ் மூலையில் நிலாத் திங்கட்டுண்டத்தான் என்னத் திருமால் திகழ்கின்றார். ` பிறைத் துண்டவார் சடையாய் பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே ` என்றதறிக. குறிக்கொண்டிருந்தது - ஆழி பெறக் கருதி, சிவனடியே சிந்தைக் குறியாகத் தியாநம் புரிந்து, ஆயிரம் செந்தாமரை. ஆயிரம் வைகல் எனலாகாது. வைகல் வைகல் - நாள்தோறும். நெறிப்பட - இண்டை கட்டும் முறைமையிற் பொருந்த. ` தொண்டர் அஞ்சுகளிறும் அடக்கிச் சுரும்பு ஆர் மலர் இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் ...... கேதாரமே ` என்றதில் உள்ள நெறி. இண்டை புனைகின்ற திருமால். ` முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக் கற்றையினாய் ` தி.4 ப.113 பா.2. நிறை - நெஞ்சில் நிறுத்திய உறுதி. ஆடவர்க்கு நிறையும் பெண்டிர்க்குக் கற்பும் உரியன. அழிப்பான் - அழித்தற் பொருட்டு. கறைக்கண்ட - திரூநீலகண்ட ( அண்மைவிளி ). நீ ஒரு பூ குறையச் செய்து. கண்ணைச் சூல்விப்பது தகுமோ ? எனல் ` சூல் விப்பதே ` என்று வினாவியதன் கருத்து : சூல்வித்தல் - தோண்டச் செய்தல். ` பெருங்காஞ்சி `:- இன்றும் பெரிய காஞ்சிபுரம் சின்னகாஞ்சி புரம் என வழங்குதல் அறிக. பெரியவன் - மகாதேவன்.