அதிகை... அம்மானே! பொன்னார் மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும் செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும் பெருமானாராகத் தெளியமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து எங்களை அமைவுறச்செய்யும்.
பொன்னைப் போல ஒளி செய்வதொரு திருமேனியுடையீர்! முறுக்குண்ட பொற்சடையீர்! கலையிற் குறையும் பிறையுடையீர்! துன்பமும் கவலையும் பிணியும் நணுகாமல் துரந்தும் இடீர். கரந்தும் இடீர். என்னைப்போல்வார்கள் இனி உம்மைத் தெளிய உணரமாட்டார்கள். அடியார் படுவது இதுவே ஆகிலும் அன்பே அமையும். வீரஸ்தாநம் - வீரட்டானம். மூலஸ்தாநம் - மூலட்டானம் என்பது போல்வது.
மிளிர்தல் - விளங்குதல், புன்சடை - பொன்போலும் செஞ்சடை. புன்மை (அற்பம்) எனல் சிவாபராதம். மெலிதல் - கலையிற் குறைதல். பிறை - பிறத்தலாகிய ஏதுப்பற்றிய பெயர். பிணித்தல் - கட்டுதல். கட்டில் - பிணிப்பினையுடைய இல்வாழ்கை (சிந்தாமணி 8.63). `துன்பத்தால் தொடக்கினேன்` (சிந்தாமணி 3.86) என்ற இடத்து, துன்பமும் அதனாலுறும் பிணிப்பும் வேறாதல் நன்கு விளங்கும். யாது செய்வல் என்ற கவலை (சிந்தாமணி 1.302). அமைதி - நிறைவு (சிந்தா. 1.78). என்போலிகள் - போல்பவன், போல்பவள், போல்வது மூன்றும் போலிகள் எனப்படும். போல்வார் எனல் பொருந்தாது. கள் ஈறு சேர்ந்து பலர்பாலைக் குறிக்கலாயிற்று. ஆகவே தெளியார் என்னும் பயனிலை கொண்டது.