அதிகை... அம்மானே! அடியேனுக்குத் தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மை யல்லாது இல்லாத காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் ஈட்டப்படும் பொருள் தேடும் செயலிலும் நீங்கினேன். என் வயிற்றினுள்ளே யான் அஞ்சுமாறு குடலைப் பறித்தெடுத்துப் புரட்டி அறுத்துச் சூலை நோய் உள் உறுப்புக்களை இழுக்க, அடியேன் தாங்க முடியாதவனாகி விட்டேன். இனி, உமக்குத் தொண்டனாகி நான் வாழக்கருதினால், அதற்கு ஏற்ப என்னைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
என்னைத் தலைமையராய்க் காவல்புரிவார் நும்மையல்லாது வேறு ஒருவரும் இல்லாமையால், மனையிலிருந்து வாழும் வாழ்க்கையினும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் வாழும் பொருளினும் நீங்கினேன்; முற்செய் தவச் சிறப்பால் விளங்கினேனாகி நுமக்கே ஆளாகித் தொண்டு செய்து வாழ்தல் உற்றேன். உற்ற என்னைத் துன்புறுத்துகின்றதாகிய சூலை நோயைத் தீர்த்தருளா திருக்கின்றீர். என் வயிற்றின் உள்ளடியில் குடலைப் பறித்துப் புரட்டி அறுத்து இழுத்திடலால் அடியேன் அஞ்சி அயர்ந்தேன். உயர்தல் - ஈண்டு நீக்கத்தைக் குறித்து நின்றது. `உக்கத்து மேலும் நடுவுயர்ந்து` `தலைக்கு மேலும் நடு இல்லையாய்` (கலித்தொகை 94) `நடுவுயர்ந்து என்றது நோன்புயர்ந்தது என்றாற்போல நின்றது`. `உயருமன் பழி` - `தாம் செய்த பழி மிகவும் போம்` `உயர்தல் - நோன்புயர்தல் போல நீக்கத்தின் கண் நின்றது`. (கலித்தொகை 129) என்புழி ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையை ஈண்டு நோக்குக. பிங்கலந்தை 1760 பார்க்க. வயந்து - வளர்ந்து; வயமாக்கி. விளங்கி எனின் வயங்கி எனல் வேண்டும். வயக்கம் - விளக்கம். `வெண்ணிற வயக்கம் மாண்டது`. (தணிகைப். நாட்டுப்.15) பழக்கமும் ஆம்.
இலாமையினால் உயர்ந்தேன் என்க. வயந்து என்றதோ டியைத்தும் பொருள் கொள்ளலாம். ஆயினும் அடுத்த திருப் பாடலை நோக்கின், அது பொருந்தாமை காண்க.
தலை என்பது சினையாகு பெயராய்த்தலைவர் என்னும் பொருட்டாய் ஒரு தலைவர் என நின்று, தலைவர் ஒருவர் காவல் இல்லாமையினால் உயர்ந்தேன் என்று இயைத்துக் கொள்ளலாயிற்று. ஆசிரியர்க்கு மனைவாழ்க்கையும் பொருளும் இல்லாமையும், `புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறுபாடிலா நிலைமை துணிந்திருந்த நல்லோர்` ஆய் உள்ளமையும்; பொன்னும் மணியும் உழவாரத்தினில் ஏந்தி எறிந்தமையும், அரம்பையர்கள் புரிந்தவற்றால் நிலை திரியாத சித்தத்தினை அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா அன்புருகு மெய்த் தன்மை யுணர்வொடு நிறுத்திச் செய்பணியின் தலை நின்றமையும் அறிவார்க்கு உயர்ந்தமை (நீங்கினமை) உடன்பாடாம். தி.4 ப.26 பா.4, 7; ப.52.பா.3,5,8; ப.54 பா.6; ப.67 பா.6, 9; ப.69 பா.9; ப.78 பா.9ஆகிய பாக்களின் உள்ளவாறு உண்டு என்பார்க்கு உடன்பாடன்று. `கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன்` (தி.4 ப.96 பா.5) `கருவுற்ற நாள் முதலாக வுன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் திருவொற்றியூரா! திருவாலவாயா! திருவாரூரா ஒருபற்று இலாமையுங் கண்டிரங்காய் கச்சியேகம்பனே.` (தி.4 ப.99 பா.6); `கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்` (தி.4 ப.94 பா.6); கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர்` (தி.6 ப.8 பா.99) என்ற ஈசர் வாக்கால் அவ் வாகீசர்க்கு மனை அறம் இல்லை என்னாது உண்டென்பார்க்கு நரகம் இல்லாது போமோ? `அப் பற்றல்லது மற்றடிநாயினேன் எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே` (தி.5 ப.96 பா.9) என்ற அப்பர்க்கு மனை வாழ்க்கைப்பற்று இருந்ததாகக் கோடல் பொருந்துமோ?
அவர்க்குப் பற்று இருந்ததாகக் கொள்ளினும், நம்மனோர்க்குள்ள அளவினது அன்று அது. ஏகனாகி இறைபணிநிற்கும் உண்மை நிலையினரிடத்தும் அஞ்ஞான கன்மப்பிரவேசம் உண்டு என்று அருள் நூல்கள் உணர்த்துகின்றன. அக்கன்மப் பிரவேசம் உளதாகாவாறு தடுக்கும் வழி அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமை. அஃதாவது (ஏகனாகி) இறைபணி வழுவாது நிற்றலாகும். அத்தகையோர்க்கும் அஞ்ஞான கன்மப் பிரவேசம் உண்டாகலாம் எனின், அதனை நம்மனோர்க்கு உள்ள பற்றினளவை நிகர்த்ததாகக் கொள்ளலாமோ? ஏகனாதலும் இறைபணி நிற்றலும் எங்கே? நாம் எங்கே? அத்தகைய சிற்றளவு பற்றுக்கே அப்பர் வருந்துகின்றார் எனக் கொண்டுரைத்தல் தக்கது. அப்பொழுது `உயர்ந்தேன்` என்பது மிகுதிப்பொருட்டாகும்.
சிவனது இச்சையே தனது இச்சை; சிவனது அறிவே தனது அறிவு; சிவனது செயலே தனது செயல். தனக்கென இச்சையும் ஞானமும் கிரியையும் உரியனவாய் இல்லை என்று சிவனுடைய இச்சாஞானக்கிரியை நிகழ்ச்சிகட்குத் தான் ஒரு கருவியாக நின்று ஒழுகுவதே இறைபணி நிற்றலாகும். பசுகரணம் சிவகரணமாதல் இன்னதே.
திருக்களிற்றுப்படியார்க்குள்ள பழைய உரைகளுள் ஒன்று (சிதம்பரம், சைவத்திரு. முத்து. வைத்தியலிங்கச் செட்டியார் அவர்கள் பதிப்பு. பக்கம்.64).
`சிவன்முதலே அன்றி முதல் இல்லை என்றும்
சிவனுடையது என்அறிவது என்றும் - சிவனவனது
என்செயலது ஆகின்றது என்றும் இவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்.` (திருக்களிறு - 64)
என்னும் திருவெண்பாவிற்கு உரிய உரையின் முதற்கண், `முதல் என்பது இச்சை ஞானம் கிரியை மூன்றில் முதலிற் கூறியது இச்சையின் மேற்று` `சிவனுடைய இச்சையே அன்றி நமக்கு இச்சையில்லை` என்று உணர்த்துகின்றது. ஆங்கு, அறிவும் செயலும் கூறப்படுதலின், `முதல்` என்றது இச்சை என்னும் பொருளதேயாகும். இதனை அறியாதார் வேறு கூறுவது பொருந்தாது.
அதனால், `முதல்` என்றது இச்சையையே. அடுத்த இரண்டும் சிவனது ஞானம் சிவனது கிரியை என ஆறனுருபிற் கூறியதால், `சிவன் முதல்` என்றதும் ஆறன்றொகையாகும். எழுவாய்த் தொடராகாது. பசுகரணங்கள் சிவகரணமாகத் துன்னிய சாக்கிரமதனில் துரியாதீதம் தோன்ற முயன்று சுவாநுபூதிகமான சிவாநுபவம் உடையவர்க்கு அம்மூன்றும் சிவனுடையனவாக நிகழ்வனவே ஆகும். ஆகாவேல், சிவகரணம் அல்ல; பசுகரணமே அவை. அவரும் சிவாநுபவத்தரல்லர்.
திருக்களிற்றுப்படியாரில் 63 - ஆவது திருவெண்பாவில், கூட்டில் வாட்சார்த்தி நில்லாதார் வீட்டிலே சென்று வினையொழிந்து நின்றாலும் நாட்டிலே நின்று நல்வினைகள் செய்தாலும் பயனொன்றும் இல்லை என்று கூறி, அடுத்த திருப்பாட்டிலே கூட்டிலே வாட்சார்த்தி நிற்குமாறு விளக்கப்பட்டது. அஃது இறைபணி நிற்றலாகும்.
`ஆன்மாவினது இச்சா ஞானக் கிரியை ஆகிய பசுகரணங்கள் சிவனது கரணமாகிய இச்சா ஞானக் கிரியை முழுதும் ஆவதே ஆன்ம தரிசனம்` (தருமையாதீனத்து வெளியீடாகிய சிவாநந்த போத சாரத்தின் உரை) ஆன்ம தரிசனமும் சிவரூபமும் ஒருங்கு நிகழ்வன. `சடசித்துக்கள் முழுவதும் சுகப்பிரபையே தனக்கு வடிவாக உடைய சிவம் கலத்தலால் சிவமயம் எனப் பிரபஞ்சத்தைக் காண்பது சிவரூபம் ஆம்.` (சிவாநந்த போத சாரம் உரை) இவற்றால், `முதல்` என்றது இச்சையே ஆதல் இனிது விளங்கும்.
`நாயகன் எல்லா ஞானத் தொழில் முதல் நண்ணலாலே காயமோ மாயை அன்று காண்பது சத்திதன்னால்` (சித்தியார். சுபக்கம். சூ. 1 - 41) எனவும், `இறைவனாவான் ஞானம் எல்லாம் எல்லா முதன்மை அநுக்கிரகம் எல்லாம் இயல்புடையான், (சித்தியார். சூ. 8:- 17) எனவும் வரும் இடங்களிலும் முதல் என இச்சையைக் குறித்தது காண்க.
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையன் ஆகிய நின்மலன் நினைந்த மேனி நிறுத்தும் முதன்மையன் என்பதில் ஐயம் ஏது? பராசத்தியின் முதல் வேறுபாடு இச்சையாதலினாலும் ஞானம் கிரியைகட்கு (இச்சையாதி) முன்னது ஆதலினாலும் `முதல்` எனப்பட்டது.