ஆரவாரித்துப் பெருகும் கெடிலக் கரையிலமைந்த அதிகை வீரட்டானப் பெருமானே! குளத்தில் பிறர் இறங்காமல் பாதுகாத்துச் செயற்படுபவர் தம் காவலில் சோர்வு பட்டமையால், கரையில் நின்றவர்கள் இக்குளத்தின் ஆழத்தைக் கண்டு அனுபவிப்பாயாக என்று ஆழமான குளத்தில் விழுமாறு தள்ளிவிட, அக்குளத்தில் ஆழத்தில் நிலையாக நீந்திக் கொண்டிருக்கும் வழிமுறை ஒன்றும் அறியாதேனாகிய அடியேன், சூலைநோய் வயிற்றோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டி என்னைச் செயற்படமுடியேனாகச் செய்ய, பெருமானாகிய நீயே எல்லாவினைகளையும் போக்கி அருளுவாய் என்றவார்த்தையை இதற்குமுன் கேட்டு அறியாதேனாய் நாளை வீணாக்கினேன்.
புனல் ஆர் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே:- நீர்நிறைந்த திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் உறையும் அம்மானே!
கயத்தைக் காத்து ஆளுவோரது காவலைப் பொருட் படுத்தாமையால், அதன் கரையில் நின்றவர் இக் கயத்தின் நீராழத்தளவு அறிய வினாவிய என்னை நோக்கி `நீயே இறங்கிக் கண்டு கொள்` என்று சொல்லி (நிலைக்க முடியாதவாறு), இறங்கு துறையில் நீத்துக்கு உரியதாகும் நீர்நிலையில் புகுமாறு நூக்கியிட்டதால், (நீந்த மாட்டாதவனாகி) நிலைக்கொள்ளும் ஒரு வழித்துறையை அறியேனானேன். இதைப் போல்வதொரு வார்த்தை கேட்டறிந்திலேன்.
காத்தல் - குளத்து நீரைக் கெடுப்பாரைத் தடுத்தல். ஆள்பவர் - காவற்காரர். தம்மைப் பேணுவாரும் ஆவர். இகழ்தல் - பொருட் படுத்தாமை. நீத்து - நீந்து என்னும் முதனிலை திரிந்த தொழிற் பெயர். அடங்கு - அடக்கு, இறங்கு - இறக்கு என்பனவும் அன்ன. முடக்கியிட ஆர்த்தார் (பொருத்தினார்) என்று இயைக்க. ஆர்த்தவரது அதிகை வீரட்டானம் என்க. கயம் - நீர்நிலை. இயற்கைப் பள்ளம்; ஒருவர், இருவர், பலர் வெட்டுவித்ததன்று. நூக்கியிட-
`கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன்.`
(தி.5 ப.72 பா.7)
என்பது நூக்குமாற்றை நன்கு புலப்படுத்தும்.
சைவ சமயம் விட்டுச் சமண் சமயம் புக்கதனை உளங் கொண்டு பாடியது. இது பிறிது மொழிதலாகும். காத்தாள்பவர் திலகவதியார் முதலோர், காவல் அவரது அறிவுறூஉ. இகழ்தல் - அவற்றைப் பொருட்படுத்தாது வேற்றுச் சமய நூல்களை ஆராய்ந்தறிதல். கரை நின்றவர் பிற சமயத்தார். கண்டுகொள் என்று சொல்லல் சமண் சமயத் துண்மைகளை உணர்ந்துகொள் என்று மயக்குதல். நீத்தாய கயம்புக நூக்கல் சமண் சமயம் புகச்செய்தல். நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்று அறியாமை வெளிப்படை. அறிந்தால் மீண்டும் சைவத்திற் புகார் அல்லரோ? `வார்த்தை இது ஒப்பது கண்டு அறியேன்` என்பது சைவத்தின் உயர்வு குறித்ததாகக் கோடலும் பொருந்தும்.