அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன் உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப் போக்குவது அன்றோ!
முன்னம் அடியேன் என்பது ஒரு தனி வாக்கியம். அறியாமை:- சமண் சமயம் புக்க செயலுக்குப் பண்பாகு பெயர். முனிதல் - ஆண்டவன் வினை. நலிதலும் முடக்கியிடலும் சூலையின் வினை. பின்னையும் என்று உம்மை விரித்துரைக்க. சமண் சார்தற்கு முன்னமும் அடியேன். அதை ஒதுக்கிய பின்னையும் அடியேன். இடையில் நேர்ந்தவை அறியாமையின் விளைவும் அவ்விளைவின் பயனும் ஆம். அவை முறையே சூலையும் அதன் நலிவும் முடக்கிடலும் ஆகும். மூன்றாவதடியில் தன்னை என்றும், தலையாயவர் என்றும் உள்ளது ஒருமை பன்மை மயக்கம் ஆயினும், எதுகை நோக்கியதாகும். என்னை இச் சூலைநோய் பற்றியதன் முன்னும், எனது அறியாமையால் என்னை வெறுத்து இந்நோயால் வருத்தி முடக்கியிடுதலால் பின்னும், அடியேன் குற்றம் அகன்றதும் அன்றி உமக்கு ஆளும் பட்டேன். சமண் சமயம் புகுமுன்னும் அடியேன்; அதை அகன்ற பின்னும் அடியேன்; இடையில் அறியாமையின் விளைவாய் இந் நோயாகிய பயனை எய்தினேன் என்றதுணர்க.
அன்ன நடையுடைய மகளிர் மல்கும் திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே (நான்) உமக்கு இப்போது தான் அடிமையானேன் அல்லேன். சமண் சமயம் சார்தற்கு முன்னேயே அடியேனாயிருந்தேன். அறியாமையின் விளைவாக அமண் சமயம் புக்கதால் என்னை வெறுத்து, எனக்கு இச்சூலை நோயைக் கொடுத்தாய். அது வருத்தி முடக்கியிடுகின்றது. அதனால் அச்சமயத்தை விட்ட பின்னேயும் உமக்கு ஆளும் பட்டேன். ஆட்பட்டேனையும் சூலை சுடுகின்றது. அதனைத் தீர்த்தருள்வீர். தலைவரானவர் கடன் தம்மை அடைந்தவர் வினையைப் போக்குவது அன்றோ? நான் நின் அடியேன். நீ என்னை ஆண்டாய் என்றால் உன்னை அடைந்த என் வினையைத் தீர்ப்பது அன்றோ தலைவனான உன் கடனாவது?