அதிகை... அம்மானே! உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! வெண்தலைமாலை அணிகின்றவரே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லீரே! இறந்துபட்டவருடைய மண்டை யோட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுதலின், துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
பிணி முதலியவற்றால் இறந்தவருடைய உடற் சாம்பலாகிய பொடியைக் கொண்டு திருமேனியிலே பூசவல்லீரே, விடையேறி ஊர்தலை விரும்பினீரே, தலையைச் சுற்றிலும் வெண்டலைமாலை கொண்டு அணிந்தீரே, அடிகளே, திருவதிகைக் கெடிலநதி வடபால் விளங்கும் திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரிய கடவுளே, தேவரீர் நும்மைப் பணிந்தவருடைய தீவினைகளைக் கெடுக்க வல்லீர் ஆயினும், இறந்துபட்டவரது வெண்டலையிலே பிச்சையேற்றுத் திரிவீர். நும் வலிமையை நோக்கி ஆளாகலாம் என்று விருப்பம் எழுகின்றது. நீர் பலிகொண்டுழல்வதை நோக்கி இவர்க்கோ ஆளாவது? இவர்க்கு ஆளாவதில் நமக்குப் பயன் உண்டாமோ? ஆகாதோ? என்று ஐயம் தோன்றுகிறது.
`பணிந்தாருடைய பாவங்களைப் பாற்ற வல்லவராதலின் இவர்க்கு ஆளானால் நம் சூலையைத் தொலைத்தருள்வார்` என்று துணிந்து உமக்கே ஆட்செய்து வாழலுற்றேன். அத்துணிவுடன் ஆட்செய்து வாழ்வேனாம்பட்சத்திலும் என்னைச் சுடுகின்றதாகிய சூலை நோயைத் தவிர்த்தருள்வீர்.
பணிந்தார் + அன் + அ = பணிந்தாரன. வினையாலணையும் பெயர். அன் சாரியையும் ஆறன் வேற்றுமைப் பன்மையுருபும் ஏற்று அவருடைமையாகிய பாவங்கள் என்னும் பன்மைப் பெயர் கொண்டு நின்றது. படுவெண்தலை = பட்டதலை; வெள்தலை. படுதல் - அழிதல்; தலையின் இயல்பிலிருந்து கெடுதல். துணிவு - தெளிவு. `ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்` (குறள்.353) `உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்` (பாடல் 7). பொடி - இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி. `சடையும் பிறையும் சாம்பற்பூச்சும் கீளுடையும் கொண்ட உருவம்`. (தி.1 ப.23 பா.1) பெற்றம் - விடை.
ஏற்று:- பேச்சு, பாட்டு, கீற்று, கூற்று முதலியன போன்ற பெயர். பின்னீரடியிலும் கொண்டவாறு முதலடியிலும் விளியாகக் கொள்ளல் கூடும். சுற்றும் - தலையைச் சுற்றிலும். `தலைமாலை தலைக் கணிந்து` (தி. 4 ப.9 பா.1) `தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே` (தி.7 ப.4 பா.1). அடிகள் என்பது விளியில் அடிகேள் என்று ஆயிற்று. அருமகன்:- அருமான், அர்மான், அம்மான் என மருவிற்று. பெருமகன்:- பெருமான், பெர்மான், பெம்மான் என மருவியவாறும் உணர்க.