நல்ல இனத்துப் பொருந்திய பளிங்கொடு வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையானே, விளங்குகின்ற மறையோனே, விகிர்தனே, திருவிழாக்கள் நிறைந்த அழகிய தில்லையுள் முதல்வனாகிய நினக்கு இடமான திருச்சிற்றம்பலத்தை அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத் தீவினைப் பெருக்கம் வாதிக்காது ; வருத்தா தொழியும்.
சாதியார் பளிங்கின் ஓடு - உயர்ந்த சாதிப்பளிங்கு போலும், வார் - தொங்கும், சங்கக்குழையாய் - சங்கினாலாகிய காதணியையுடையவனே. இன் - சாரியை, ஓடு ஒப்புப் பொருளில் வந்தது. ` ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல் ` என்புழிப்போல. திகழப்படும் வேதியா - வேதங்களில் விளங்க எடுத்துப் பேசப்படு பவனே. விகிர்தா - மாறானவனே. அம்கையால் - அழகிய கைகளால்.
` என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே... வழிபடும் அதனாலே ` ( தி.2 ப.106 பா.1) யென்றபடி சிவபெருமானைக் கும்பிட ` எத்தனை கோடி யுகமோ தவம் செய்திருக்கின்றன ` என்று பாராட்டற்குரிய தன்மை பற்றிக் ` கைகளால் தொழ ` - என வேண்டாது கூறினார், வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து என்பது போலக் கைபெற்றதன் பயன் அவனைக் கும்பிடற்கே யெனல் தோற்றுவித்தற்கு. அதனை, ` கரம் தரும் பயன் இது என உணர்ந்து... பெருகியதன்றே ` என்னும் ( திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் 61) சேக்கிழார் பெருமான் திருவாக்கானும் உணர்க. மலி - மிக்க. நலியா - துன்புறுத்தாதன ஆகி, வாதியாது - எதிரிட்டு நில்லாமல், அகலும் - நீங்கும். ` வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே `( தி.2 ப.106 பா.11) என்ற இடத்தும் ( வாதியாது - பாதியாது ) இப்பொருளில் வருதல் காண்க. வல்ல - குறிப்புப் பெயரெச்சத்தின் ஈறு தொக்கது.