திரிபுரத்தை எரித்தொழிக்க மலை வில்லால் தீக்கணையை எய்தவனே, பழந் தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப் பெருக்கால், நஞ்சினை உண்டதொரு தூய நீல மணி போலக் கறுத்த திருக்கழுத்தினனே ! பற்கள் நிறைந்த பிளந்த வாயுடையதொரு தலையில் பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே ! தில்லைவாழந்தணர் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக் கழியும்.
தொல்லையார் - தொன்மையுடைய தேவர்கள், தூ - தூய,( கலப்பில்லாத ) மணி - நீல ரத்தினம் போன்ற. மிடறா - கண்டத்தையுடையவனே ! பகுவாய் - பிளந்த வாய். தலை - மண்டையோடு. பண்டரங்கம் - பாண்டரங்கக் கூத்து எனவும், ` மதில் எரிய எய்தவனே ` எனவும் ( உன் ) சேவடி கைதொழ வினை இல்லையாம் எனவும் கூட்டுக. திரிபுரதகனம் செய்த மகிழ்ச்சியால் தேரே மேடையாக நின்று சிவபெருமான் ஆடிய கூத்தைப் ` பாண்டரங்கம் ` என்பர். அது ` திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் தேரே யரங்கமாக ஆடிய கூத்தே பாண்டரங்கமே ` என்பதால் அறிக.