பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச் செய்து அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும், அழகும் ஒளியும் உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக் கண்களையும் உடைய சிவகாமியம்மையார் கொங்கைகளை விரும்பிய வார்சடையான், ( நடராசப் பெருமான் ), அரகர முழக்கஞ் செய்து விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப் போன்ற உடற் கட்டினர். பேரார்வத்தோடு திருக்கழலணிந்த சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழ, பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் முழு முதல்வன் அடியவர்க்கு வினைத் தொடர்பு இல்லை.
` கொம்பு.. முலை ` என்றது கங்கையைக் குறித்தலுமாம். ஆயினும், அஃது அத்துணைச் சிறப்பினதன்று. காளையர் என்பது வழிபடுவோருள் அத்தகையாரைக் குறித்ததெனலும் பொருந்தும். காளையர்க்கு முன்னும் பின்னும் உள்ள அடைமொழியால் முறையே பெருமானது திருமேனியிற் கொண்ட ஆர்வமும் திருவடிக்கண் நின்ற வேட்கையும் விளங்கும்.
கொம்பு - பூங்கொம்பை. அலைத்து ( நமக்கு இத்தகைய அழகே இல்லையென வருந்த ) வருத்தி, அழகு எய்திய - அழகைப்பெற்ற. நுண் இடை - சிறிய இடை, கோலம் - அழகிய, வாள். ஒளி பொருந்திய முகத்து - முகத்தில், அம்பு அலைத்த - அம்புகளை, ( அவ்வாறே ) வருத்திய. இரண்டு கண்ணாள் - இரு விழிகளையுடைய உமாதேவியாரின், வார்சடை - நெடிய சடாபாரம். கம்பலைத்து - முக்காரம் செய்து, காமுறு - ( கண்டார் ) விரும்பும், காளையர் - ஏறுபோற் பீடுநடையையுடைய தில்லைவாழ் அந்தணர் மக்கள், காதலால் - அன்போடு, கழல் சேவடி கை தொழ - கழலையணிந்த சிவந்த திருவடிகளைத் தொழ. அடையாவினை - துன்பங்கள் அடையமாட்டா. இறைவனைப் போற்றும் வீறுடைமையால் பெருமித நடைக்குக் காளை உவமம். ` ஏறுபோற் பீடு நடை ` என்றார் வள்ளுவரும். ( திருக்குறள் 59) தில்லைவாழந்தணர்களின், துதித்தல், பாடுதல், புகழ் பாராட்டுதல் ஆகிய செயல்களின் ஓசைக்கு, முக்காரம் செய்தல் ஆகிய உவமையும் பெறப்படும். ஏற்றின் ஒலி முக்காரம் எனப்படும். கம்பலைத்து - கம்பலை யென்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம். கம்பலை - ஓசை. ` கம்பலை சும்மை, கலியே, அழுங்கல் என்றிவை நான்கும் அரவப்பொருள ` ( தொல். சொல். உரி. 53) காதலான் : ஆனுருபு ஒடுப்பொருளில் வந்தது. ` தூங்குகையான் ஓங்குநடைய ` என்புழிப்போல. ( புறம்.22. )