ஆடையில்லாத அரையினராய்த் திரிவாராகிய சமணருரைகளையும் துவரூட்டிய ஆடையால் கொள்ளும் வேடத்தவராகிய தேரருரைகளையும் ஒரு பொருளுரையாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உலகத்து அவலங்களை மாற்ற வல்லாரல்லர். சிவாகமங்களைக் கற்று நாற்பாதங்களையும் வல்ல சைவர் தொழுது ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைக் கண்ட ஆராத காதலால், கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழ உற்றவரே உயிர்க்கு உலகினால் உள்ள உறுதி ( ஆன்ம லாபம் ) கொள்ள வல்லவராவர்.
வெற்றரையர் ( வெறு + அரையர் ) ஆடையணியாத இடுப்பினர், சமணர். துவர் ஆடையர் - மருதம் துவர் தோய்ந்த ( காவி ) ஆடையை யுடையவர், புத்தர். ( ஆகிய ) அவர்கள் உரை ( யைக் ) கொள்ளன் மின் - கேளாதீர்கள். அவர் , உலகின் அவலம் - உலகிற் பிறந்திறந்து உழல்வதாகிய துன்பத்தை, மாற்றகில்லார் - போக்கும் வலியற்றவர். ( ஆதலின் அவற்றை விடுத்து ) கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலத்தில், காதலால் - அன்போடு, கழல்சேஅடி - கழலை யணிந்ததால் சிவந்த குஞ்சித பாதத்தை. கைதொழ உற்றவர் - கையால் தொழுதல் உறுவோர், உலகின் உறுதி கொள வல்லார் - உலகில் மானிடப் பிறவியிற் பிறந்த பயனை அடைய வல்லவர் ஆவர். அது ` மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம் ஆனிடத் தைந்தும் ஆடு அரன் பணிக்காகவன்றோ ` என்றது ( சித்தியார் . சுபக்கம் 92) ` ஆக்கையாற் பயனென் அரன்கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப்போற்றி யென்னாத இவ்வாக்கையால் பயனென் `. ( தி.4 ப.9 பா.8)