சிவபோகத்தின் சிறப்பை அறியாதவர்களும், துவராடை போர்த்துத்திரிபவர்களும் ஆகிய சமண புத்தர்களின் உடலை ஏறெடுத்தும் பாராத சிவனடியார்களுக்குத் தலைவனாகிய சிவபிரானது ஊர், மௌனத்தின் சிறப்பை அறிந்தவர்களும், கலைகளையும் முத்தமிழ் நூல்களையும் கற்றமேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்.
போகம் - சிவானந்த போகத்தை. துவர் - பழுப்பு ஏறிய ஆடைக்கு ஆகுபெயர். உழல்வார் - திரிவார் (சமணர்சாக்கியர்) ஆகம் அறியா அடியார் - சிவநிந்தைசெய்யும் பிறமதத்தரை ஏறெடுத்தும் பார்க்காத சிவனடியார். ஆகம் - உடம்பு. மூகம் - மௌனம். மீகம் - வானோர்க்குயர்ந்த உலகம். (கம் - வான். மீ - மேல்.) மூகம் அறிவாரும் கலை முத்தமிழ் நூலால் மீகம் அறிவாரும் வாழ்கின்ற வேணுபுரம். அறிவார் - ஞானியர்.