நீடும் ஒளியும் நிறை இருளும் ஓரிடத்துக் கூடல் அரிது விரிந்த பிரகாசமும் நிறைந்த இருளும் ஓரிடத்திலே கூடமாட்டாது ; கொடுவினையேன் பாடு இதன்முன் கொடுவினையேன் பக்கல் தரிசிப்பதற்கு முன் ; வார் சோலை உயர் மருதச் சம்பந்தா நீ ஒன்ற நின்றவாறு எவ்வாறு அழகிய சோலை யுயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனிவனே, தேவரீர் அடியேனிடத்துப் பொருந்த நின்றதெப்படி.
அந்தகன் கண்ணுக்கு ஆதித்தப் பிரகாசம் வியாத்தமா யிருந்தும் தெரியாத தன்மைபோலென்பது கருத்து.
உதாரணம் : சிவஞானபோதத்தில் (11.3) ‘அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க், கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன்’ என்பது கண்டுகொள்க. மலம் ஆன்மாவைச் சகசமாய் மறைத்திருக்கையிலே சிவம் ஆன்மாவைப் பொருந்தி நின்ற தெப்படியென்றும் வினா. உம் : சிவஞான போதத்தில் (7.5) ‘மெய்ஞ்ஞானந் தன்னில்... தான்’ ; சிவதருமோத்தரத்தில் ‘பரமசிவம் பராசத்தி பல்லுயிர்க்கும் பயின்றிருக்க, விரவுவதெ னிருளெனிற்கேள் வெய்யவழல் பசுமரத்தில், விரவியதே பசுமரமும் வெந்தவல வெந்து விழும், பருவமுறக் கரணமுறப் பதியுமுறப் பழுதறவே’ என்பன கண்டுகொள்க.