உய்யவந்த தேவநாயனார் செய்த திருவுந்தியாரென்னும் நூலினுடைய உண்மையை யறிந்தவர்கள் பிரபஞ்ச முழுதையும் (மலக் கயம்=) அஞ்ஞான சாகரமாகக் காணக்கடவது.
(குறிப்பு : திருவுந்தியார் கி.பி. 1147லும் திருக்களிற்றுப்படியார் 1177 லும் செய்யப்பட்டன. நூலாசிரியர்களைக் குறித்து வழங்கும் வரலாற்றை, சமாஜத்து சித்தாந்த சாத்திர முதற்பதிப்பின் உஎ, உஅம் பக்கங்களிற் காணலாம். இவ்விரு நூல்களுக்கும் அங்கே பதிக்கப்பட்ட உரை திருவாவடுதுறை யாதீனத்தைச் சேர்ந்த தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசத் தம்பிரான் செய்த விரிவுரை. இந்தப் பதிப்பில் வெளியிடப்படுவது வேறு உரை. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. உரைகளின் இறுதியில் எழுதப் பெற்றுள்ள ‘அம்பலவாண குருவே துணை’, ‘நமச்சிவாய குருவே துணை’ என்ற தொடர்களினால் இவ்வுரையாசிரியர் திருவாவடுதுரையாதீனத்தைச் சேர்ந்தவர் என்று கருதலாம். இவருரையைத் தழுவியே தம்பிரானது விரிவுரை செய்யப் பெற்றது; இருவர் உரையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். நூல்கள் இரண்டும் பழைய தமிழ் முறையில் எளிய செவ்விய நடையில் அமைந்திருப்பதற்கேற்ப, இவ்வுரையாசிரியரும் எளிமையாக இலக்கியச் சுவைபொருந்தத் தம் பொழிப்புரையைச் செய்திருக்கிறார். உரைத் தொடக்கத்தில் நூலாசிரியர்களின் ‘சந்தான பரம்பரை’யைக் கூறுகிறார். வழக்கிலுள்ள வரலாற்றுக்கு இது சிறிது மாறுபட்டிருக்கிறது. சில பாடல்களுக்கு இவர் வேறான பாடம் கொண்டிருக்கிறார்; இவற்றுட் பெரும்பாலான சிறந்தவை. காலஞ்சென்ற திரு. அனவரத விநாயகம் பிள்ளையவர்கள் எழுதி வைத்திருந்த காகிதப்பிரதியே இப்பதிப்புக்கு ஆதாரமானது; திருவுந்தியாருரையை மட்டும் அவர்களே காலஞ் சென்ற திரு. எம்.பி.எயி. துரைசாமி முதலியாரவர்களுடைய ஏட்டோடு ஒப்பு நோக்கித் திருத்தி வைத்திருந்தார்கள். திருகளிற்றுப்படியாருக்கு இவ்வுரையன்றி, சிறந்த அனுபூதிமானொருவர் எழுதிய வேறு பழைய உரையொன்றும் உண்டு; இது இன்னும் அச்சில் வெளிவரவில்லை.)
அருணாச்சலம்