உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றம் அற்றவர்க்கற்றவன் அல்லவர்க் கல்லவன் அந்தமாதியில்லவன் வந்து - ஆசாரியனருளிச் செய்த உண்மையிலே பொருந்தினவர்கள் அதனைச் சிந்திக்கப் பெற்றவர்கள் அந்த உண்மையிலே முழுதுந் தன்னைக் கொடுத்துத் தானதுவாய்த் தன் செயலற்றவர்க்குத் தான் அவர் செயலாய் நிற்கிறவன் தானென்றும் அவனென்றும் இரண்டுபட்டவர்களுக்கு வேறுபட்டிருக்கிறவன் தோற்றமும் ஈறும் இல்லாதவன் திருமேனி கொண்டு வந்து; குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும் பரப்பைக் குவித்துநிறுத்திப் பிடித்திட்டு - குரங்குபோலே ஓரிடத்து நிலையில்லாத மனத்தையுடைய கொடிய வினையேன் உழன்று திரியும் வருத்தத்தைக் கெடுத்து ஒரு நிலையிலே நிறுத்தி என்னை யடிமை பிடித்து என்னும்படிக் காட்டி; இருள் வெளியாகும் மருளினை யறுத்து - வெளியும் இருளுமாகிய மயக்கத்தைக் கெடுத்து இவை யிரண்டுமல்லவாய் நின்ற நிலை காட்டி; வந்து புகுதலுஞ் சென்று நீங்கலுமின்றி ஒன்றாய் நின்ற அந்நிலையில் - கண்ணிற்படலத்தை ஒருவன் வந்துரித்த விடத்துக் கண்ணொளியைச் சூரியப்பிரகாசம் வந்து கூடவுமில்லை சூரியப்பிரகாசத்திலே கண்ணொளிபோய்க் கூடினதுமில்லையதுபோல, தானும் புதிதாக வந்து பொருந்துதலுங் கூடினவர் சென்று நீங்கிப் போகலும் இல்லாதபடி, ஏகமாய் அப்படி நின்றநிலை தான்; ஒன்றாகாமல் - பொன்னும் பணியும்போல ஒன்றென்னும் மாயாவாதமுமல்லவாய் உடலும் உயிரும்போல வொன்றாய்; இரண்டாகாமல் - இருளும் வெளியும்போல இரண்டாயிருக்கிற பேதவாதமுமல்லவாய் கண்ணும் ஆதித்தனும் போலவிரண்டாய்; ஒன்றுமிரண்டு மின்றாகாமல் - சத்தமும் அத்தமும் (=பொருளும்) இரண்டாயிருந்து பின்பு ஒன்றானதுபோல அன்மாவென்றுஞ் சிவனென்றும் இரண்டாயிருந்து முத்தியில் ஒன்றாமென்னும் பாற்கரியன் மதமுமல்லவாய் ஆன்மாவும் ஆன்மஞானமும்போல இரண்டாயிருந்து ஒன்றாவதாய்; தன்னதுபெருமை தாக்கானாயினும் என்னது பெருமை எல்லா மெய்தி - தனது முதன்மையாகிய பஞ்சகிருத்தியம் எனக்குத் தாரானாயினும் எனக்குப் பெருமையாகிய பாச சாலங்களெல்லாந் தான்முன்னின்று மேற்போட்டுக்கொண்டு தன்னை எனக்குத் தருவதையன்றியும்; என்னையும் எனக்குத் தந்து - தன்னுண்மை யான் பெறுவதன்றி என்னுண்மை யான் பெறும்படித் தந்து; தன்னது பேரானந்தப் பெருங்கடலதனுள் ஆராவின்பம் அளித்து - தனதாகிய பேரானந்தக் கடலுள் அமையாத அமுதம் எனக்குத் தந்து; தீரா உள்ளும் புறம்பும் ஒழிவின்றி நின்ற வள்ளன்மை காட்டி மலரடி யருளிய - நீக்கமற்று உள்ளேனும் புறம்பேனுந் தெரியாதபடி யொழிவற நிறைந்த தலைமையைக் காட்டித் தனது திருவடியைத் தந்த; மன்னன் - ஞானராசா; எங்கோன் - எம்முடைய சுவாமியாயுள்ளவன்; வார்புனற் பெண்ணை வெண்ணை காவலன் மெய்கண்டதேவன் அண்ணல் அருளாலயத்தன் - ஒழுக்கறாத புனல்பொருந்திய பெண்ணையால் சூழப்பட்ட திருவெண்ணெய்நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவன், சருவான்மாக்களுக்குங் கருத்தா, என்னுடைய உள்ளமே (தன் அருளே?) கோயிலாகக் கொண்டவன்; நண்ணிய மலம் முதலாயின மாய்க்கும் உலக உயிர்க்கெல்லாம் ஒரு கண்ணே - பொருந்திய ஆணவமலத்தை லிங்கமூர்த்தமாய் வந்து கெடாமற் கெடுத்தும் மாயையைக் குருமூர்த்தமாய் வந்து கெடாமற்கெடுத்தும் கன்மத்தைச் சங்கம மூர்த்தமாய் வந்து கெடாமற் கெடுத்தும், இப்படி வந்த மூன்று முதலும் பிரபஞ்சத்துக்கும் ஆன்மாக்களுக்கு மிடமும் ஒரு முதலே யென்றவாறு.
இச்செய்யுள் கர்த்தா விரிவித்த முறைமை கூறியது.இருபா விருப துரையெழுதி னோன்முன்
ஒருவா விகற்ப முணர்ந்தோன் – அருளுடம்பாம்
பண்புடைய சிற்றம் பலநாடி தாள்பணிவோன்
சண்பைநகர்த் தத்துவநா தன்.
(குறிப்பு : - அருணந்தி சிவாசாரியார் செய்தருளிய இருபா விருபது, திருவாவடுதுறை நமச்சிவாயத்தம்பிரான் செய்தவிரிவுரையோடு சமாஜத்தின் சித்தாந்த சாத்திர முதற் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது; இந்தப் பதிப்பில் சீகாழித் தத்துவநாதர் செய்த காண்டிகை யுரை முதன் முதலாக வெளியிடப்படுகிறது. இவர் சிற்றம்பல நாடிகள் சீடரென்பது உரையிறுதியில் காணும் செய்யுளால் விளங்கும். இவரே சிந்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகிய உண்மை நெறி விளக்கம் செய்தார் என்பது காலஞ்சென்ற திரு. அனவரதவிநாயகம் பிள்ளையவர்களால் முதற்பதிப்பின் 980-982 பக்கங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் பிரதியின் துணை கொண்டு இவ்வுரை இங்கு பதிப்பிக்கப்படுகிறது. - மு. அருணாசலம்)