எண்டிசைவிளங்க இருட்படாம் போக்கி முண்டகம். மலர்த்தி மூதறிவருளும் மேதினி யுதய மெய்கண்டதேவ கோதில் அமுத குணப்பெருங் குன்ற பிரபஞ்சத்தை மறைத்த இருளாகிய பீடையை நீக்கி எல்லாருங் காணப்பண்ணியுங் காந்தக் கல்லில் அக்கினியைத் தோற்றுவித்தும் தாமரையை யலர்வித்தும் உலர்வித்துஞ்செய்யும் முறைமை போலவும் மிக்க அறிவைத் தரும் ஆதித்தனைப் போல உலகத்துக்கு வந்த ஞானதித்தனாகிய மெய்கண்ட தேவனே எனக்குத் துராலறத் (=துன்பமறத்) தரும் அமுதனே குணமாகிய பெரிய மலையே; என்னினார்தலும் அகறலும் என்னைகொல் என்னிடத்தில் ஒருகாற் பிரகாசிக்கிறதும் ஒருகாற் பிரகாசியாமலிருக்கிறதும் எப்படியென்ன; உன்னிற்றுன்னி யுன்னாவிடிற் பெயர்குவை யென்னுமதுவே நின்னியல்பெனினே உன்னைச் செறிந்தபோது செறிந்தும் உன்னைச் செறியாதபோது நீங்கியுஞ் செய்வை யென்பதுதானே உன்னியல்பென்று கூறின்; வியங்கோளாளனுமாகி இயங்கலுமுண்டெனப்படுவை கருணையாளனென்கிற மேற்கோளையுடையவனென்கிறதும் உண்டாம்படி எப்படி; எண்தோள் முக்கண் யாங்கணும் பிரியாது ஓங்கு நின் நிலையின் யான் வந்தணைந்து மீள்குவனாயின் மூன்று நய னமும் எட்டுப்புயமும் முதலியவற்றைக் கரந்து மானிடயாக்கையில் வெளிப்பட்டு வந்த மெய்கண்டதேவனே ஓரிடத்திலும் நீக்கமற நின்ற நினது நிறைவிலே யான் வந்தணைந்து மீள்குவனாயின்; ஆற்றுத்துயருற்றோர் அணிநிழல் நசைஇ வீற்று விற்றிழிதரவேண்டலும் வெறுத்தலுமின்றச் சாயைக்கு நன்று மன்னியல்பே நானுனது திருவடியிலே சேர்ந்து மீள்குவேனாயின் கோடைக்காலத்து வழித்துயருற்றோர் நிழல் கண்டால் அந்நிழலையடைந்திருக்க விரும்புதலும் அதனை நீங்கிப் போகுதலுஞ் செய்யுமிடத்து அந்தச் சாயையானது வழி நடந்து துயருற்றோரை வாவென்றழைத்ததுமில்லைத் தனது கோட்டைக் குறைத்தோரை வெறுத்துத் தள்ளினது மில்லை யதுபோல ஆன்மாச் சென்று நீங்கச் சிவன் நினைவற்றிருந்தவனாம்; அனையை யாகுவை அதுவுமின்றி அந்நிழல் போல நீயும் சடமாவை; நினைவருங்காலை இந்நிலையதனில் ஏழையேற்கிரங்கி நின்னை வெளிப்படுத் தொளிப்பை நீயேல்நினைதற்கரிய பொருளாகிய நீதான் முன்சொன்ன சாயை (போல) அறிவற்ற எனக்கிரங்கி உன்னை யொருகாற் பிரகாசிப்பித்தும் ஒருகாற் பிரகாசியாமலும் இருப்பையாமாகில்; அருள்மாறாகும் பெரும உன்னருள் நீக்கமற்ற தென்பதற்கு மாறுபாடாகுந் தலைவனே; அஃதின்றியும் நிற்பெற்றவர்க்கும் உற்பவமுண்டெனுஞ் சொற்பெறும் அதுவல்லாமலும் உனது திருவடியிலே சேர்ந்தவர்களுக்குஞ் செனனமுண்டென்னுஞ் சொல்லுண்டாம்; அஃது இத்தொல்லுலகில்லை உபாதியை நீங்கித் திருவடியடைந்த ஆன்மாக்களுக்குச் செனனமுண்டாமென்பதுதான் இந்த உலகத்துளில்லை; அவ்வவையமைவுஞ் சால்பும் மயர்வறச் சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்சொல்லே சொல்லுக சொல்லிறந்தோயே அனாதியில் அந்த மலங்களின் கூட்டமும் அனாதியில் உன்னை விட்டு நீங்காத முறைமையினையும் மயக்கமறப் பாதகப்படாமல் சொல்லுமிடத்து எதிர்த்துச் சொல்லாத சொல்லே சொல்லுவாயாகச் சொல்லுக் கெட்டாதவனே யென்றவாறு.
இச்செய்யுள், ஆன்மாச் சிவனிடத்துக் கூட்டுமளவில் மலங்கெட்டதோ நின்றதோ ஆன்மாத்தான் கூடி மீள்குவதோ நீதான் கூடி மீள்குவையோ ஏதென்று சொல்லென வினாயதற்கு உத்தரம்: