பரை உயிரில்... அடியாம் முன் உயிர்க்குயிராய் நின்றறிவித்த அடிஞானமாகிய பரையானது உயிரிலே யானெனதென்பதற நின்றது திருவடியாமென்றும் ; பார்ப்பிடம்... முகமாம் சோகந் தோன்றிச் சுகத்திற்பட்டுப் பார்க்கப்பட்ட பாசப் பரப்பெங்குஞ் சோதிக்குட் சோதியாஞ் சிவமாய்த் தோன்றலது முகமாமென்றும் ; உரையிறந்த... என்று தரிசித்த அந்தச் சிவப்பேற்றில் வாக்கு மனாதீதமாய் ஒரு ஆனந்தமுண்டாம் அதுவே முடியாமென்றும் ; அங்குண்மையினை... நூலே சிவனுக்குத் திருவடி யென்றுந் திருமுகமென்றுந் திருமுடி யென்றுஞ் சொல்லப்படுமவைகளின் உண்மையை மிகவுந் தெளிந்து அதுவே பொருளாய் மண் முதலான தத்துவங்களின் மீண்டும் போகாது, துறந்து நின்ற நான் பிரமமென்னும் பசுஞானமான தன்னிலையிலேயும் நில்லாது, மேலான பரையிலேயும் நின்றழுந்தாது, சிவப்பேற்றிலாகும் அறிதற்கரிய பரமானந்தத்தே சேர்தல் சிவனை உள்ளபடி தரிசிப்பதாஞ் சிவதரிசனமென்று சிவாகமங்கள் சொல்லும்.