அழுக்குப் பொருந்திய மேனியை உடைய சமணர்கள் கூறிய கூற்றைக் கேட்ட அடிகள், அதற்கு மறுமாற்றம் கூறுவாராய், `திருவில்லாதவர்களே! பூசும் நீற்றினை நறுமணமுடைய சந்தனம் என அணியும் சிவபெருமானுக்கு ஆன அத்தொண்டு எதுவாயினும் அது நல்ல அறமேயாம் என்பது அறிய வருமோ உமக்கு' என்றார்.
திரு-சிவத்திரு; அதனை உளங்கொளாமையின் திரு விலிகாள் என்றார். `உருவிலான் பெருமையை உளங்கொளாத அத் திருவிலார்' (தி.3 ப.14 பா.2) எனவரும் திருவாக்கும் காண்க.