தண்டியடிகள் என்பார் திருவாரூரில் பிறந்திடும் பெருமையாம் தவமுடையார். தேவர்கள் நான்மறைகளைப் பாட ஆடிடும் சிவந்த பொன்மயமான இறைவரின் திருவடிகளை மனத்தில் கொண்ட கருத்தில், உள்ளத்தே நோக்கி மகிழும் குறிப்பேயல்லாது வெளியே நோக்கிக் காணும் உணர்ச்சிகளை நீக்கினார் போன்று, தாம் தோன்றிய பொழுதே கண்பார்வை யிலரானார்.
திருவாரூரில் பிறக்க முத்தி என்பர். திருவாரூர்ப் பிறந்தார் கள் எல்லாருக்கும் அடியேன் என்பர் சுந்தரரும் (தி.7 ப.39 பா.10), `திருவாரூர்த் தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால், ஆற்றவும் மற்றவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்' என்பது மனு வேந்தர் கூற்றாகும் (தி.12 திருமலைச் சரு. பா.126). `ஆரூர்ப் பிறத்தல் நேர்படின் அல்லது, செயற்கையின் எய்தும் இயற்கைத் தன்றே' என்பர் குமரகுருபர அடிகள் (குமர. சிதம்பர மும். பா.1). இத்தகைய அருமை யும் பெருமையும் நோக்கியே திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார் என்றார். புற நோக்கினும் இவர் பெருமானைக் கண்டு மகிழும் அகநோக்குச் சிறப்புடைத்தாதல் பற்றியே சுந்தரர் பெருமானும் `நாட்டம்மிகு தண்டி' (தி.7 ப.39 பா.5) என்றார். `அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்' (தி.10 த.9 ப.25 பா.10) என்பர் திருமூலரும்.