அந்நாட்டு அரசராய நரசிங்க முனையர் என்பார், அந்நம்பியாரூரரைப் பார்த்துச் சொலற்கரிய ஆசை மிகுதியால், அவர் தந்தையாராகிய சடையனாரிடத்துச் சென்று, அவருக்கும் தமக்கும் இருக்கும் நட்பு மிகுதியால், அந்நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுக் கொண்டு, தம்மரபில் பிறந்த இளவரசருக்குச் செய்யும் சிறப்புக்களை யெல்லாம் செய்து, அன்போடு தம் மகனாராக வளர்த்து வந்தார்.
நரசிங்க முனையர்: இம்மரபினர் சிற்றரசர்களாகவும், சோழப் பேரரசின் அமைச்சர்களாகவும் விளங்கியவர்கள். `பலர் முடிமேல் - ஆர்க்குங் கழற் காலனகன் றனதவையுட் பார்க்குமதி மந்திர பாலகரிற் போர்க்குத் தொடுக்குங் கமழ் தும்பை தூசினொடுஞ் சூடிக் கொடுத்த புகழ்முனையர் கோனும்` (விக். உலா வரி, 140-142) என வரும் விக்கிரம சோழனுலாவால் இம் மரபினர் அமைச்சராய் இருந் தமை அறியலாம். இவர் பல்லவ மன்னனாகிய கழற்சிங்கர் காலத்தில் வாழ்ந்த சிற்றரசர் ஆவர். பரவ அரும் - சொல்லுதற்கரிய. பயந்தவர் - பெற்றோர். விரவிய நண்பு - மனம் கலந்த அன்பு. நரசிங்க முனையருக்கும் சடையனாருக்கும் இருந்த நட்புரிமை இதனால் தெரிகிறது. வேண்டினர் பெற்று - நரசிங்கமுனையரின் வேண்டு கோட்கு இணங்கச் சடையனாரால் கொடுக்கப் பெற்று. மகன்மை - மகனாகக் கொள்ளும் உரிமை.
இக்காலத்தில் இதனைச் சுவிகாரம், தத்து எடுத்தல் என்றெல் லாம் கூறுப. இவற்றிற்கு எல்லாம் மேலாகத் தெளிவும், இனிமையும் தோன்ற இச் சொல்லாட்சி அமைந்துள்ளது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.