தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய தேவதேவராகிய சிவபிரானார், மூப்பு அடையாத அழகினர். ஒரு கலையோடு முளைத்த வெண்மையான பிறையை அணிந்தவர். அவர் கொன்றைமாலை சூடியவராய்க் காமக் குறிப்புத் தோன்றும் புன்சிரிப்புடன் என் இல்லம் நோக்கி வந்து, பொய்கலந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்து போவாரைப்போல் காட்டி என்னை மயக்கி என் உள்ளத்தில் புக்கொளித்த புரிநூலர் ஆவார்.
இவர் வரும்போது பிறைசூடி, கொன்றை மாலை யணிந்து, புன்சிரிப்புச் செய்துகொண்டே வந்தார்; பல பொய்யைப் பேசிக்கொண்டே போவார்போல என் மனத்தை மயக்கிப் புகுந்து கொண்டார் என்கின்றது. மூவா வண்ணர் - மூப்படையாத அழகை உடையவர். முறுவல் - காமக்குறிப்புத் தோன்றும் சிரிப்பு. பொக்கம் - பொய். உள்ளம் புக்க புரிநூலர் என்றது புரிநூல் அணிந்ததற்கேலாத செயல் செய்தார் என்னுங்குறிப்பு. தேவு - தெய்வத்தன்மை; தேன் வார் சோலை என்றுமாம்.