தேன் பொருந்திய மலரில் கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ்போல ஒலி செய்யும் திருக்கானூரில் மேவிய ஒளி பொருந்திய வெண்பிறையை முடியிற் சூடிய இறைவர், காய்ந்த வெண்மையான எலும்பும் திருநீறும் முப்புரிநூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக வந்தவர் போல வந்து, `ஐயம் இடுக` என்று கூறிக் கொண்டே என் இல்லத்தில் புகுந்து உள்ளத் தெளிவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்.
இதுவும்; பிச்சை என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வந்து என்னுடைய தெளிவையும் நாணத்தையுங்கொண்ட கள்வர் இவர் என்கின்றது. முளி - காய்ந்த. எளிவந்தார்போல் - இரங்கத் தக்கவர்போல். உள்ளத் தெளிவும் நாணுங்கொண்ட கள்வர் என்றது தன்னுடைய நிறையும் நாணும் அகன்றன என்பதை விளக்கியது. தேறல் - தேன்.