இடம் அகன்ற சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபிரானார் வானகத்தில் பொருந்திய பிறைமதியைக் கண்ணியாகச்சூடி, வெண்ணிறமான மாலையை அணிந்து, குளிர்ந்த என்புமாலை, ஆமையோடு ஆகிய வற்றைப் புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க, என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து, எனக்கு மிக்க விரகவேதனையைத் தந்து சென்றார். இது முறையோ?
வீட்டில் கன்னம்வைத்துப் புகுந்த கள்வனின் அடை யாளங் கூறுவார்போலத் தலைவி, இல்புகுந்து எவ்வஞ்செய்த தலைவனின் கண்ணி அணி அடையாளங்கள் இவற்றைக் கூறுகின்றாள். விண் - ஆகாயம். கண்ணி - தலைமாலை. தண் ஆர் அக்கு - குளிர்ச்சி பொருந்திய எலும்புமாலை. எண்ணாவந்து என் இல் புகுந்து எவ்வ நோய் செய்தான் - யான் அறியாமையால் எண்ணாதிருந்தபோதிலும், வலியவந்து இல்லில் புகுந்து கலந்து பிரிந்த மிக்க துன்பத்தைச் செய்தான்; என்றது ஆன்மா தலைவனை, தானே சென்று அடைதற்கும், கலத்தற்கும், பிரிதற்கும் என்றும் சுதந்திரமில்லாதன என்று அறிவித்தவாறு. கண் - இடம்.