கருநிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினராகிய இறைவர், சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உண்ணப்பெறும் தேனும் நிறைந்து செவ்விதாக மலர்ந்த கொன்றை மலர்களைச் சூடியவராய் வேதப் பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார், இதுமுறையோ?.
கானூர்மேவிய பிறையார், சடையார், விடைமேல் வருவாராய் என் வீட்டில் புகுந்து என் நலத்தைக் கொண்டார் என்று தலைவி அறத்தொடு நிற்பதாக எழுந்தது. சிறை - சிறகு. மறை ஆர் பாடல் - வேதப்பாடல். மால்விடை - பெரிய இடபம். இறையார் - சிவன். எழில்நலம் என்பது எழிலும் நலமும் என உம்மைத் தொகை.
கறையார் சோலை - இருள் சூழ்ந்த சோலை.