வேள்விகள் இயற்றும் முறைகளைக் கூறும் வேதங் களை ஓதும் நான்முகனும், வளைந்த பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் தங்கள் பாதுகாப்புக்குரியவராகக் கருதும் செல்வராகிய கானூர் மேவிய பெருமானார், ஆமை, அரவு, பன்றியின் வெண்மையான கொம்பு என்புமாலை ஆகியவற்றைப் பூண்ட ஓர்கள்வராய் வெள்ளை உள்ளம் படைத்தவர் போலக் கருதுமாறு நல்லவர் போல வந்து எனக்கு மனவேதனையைத் தந்தார்.
எலும்பு முதலியவற்றை அணிந்து வெள்ளை உள்ளம் படைத்தவர்போல வந்து கள்வராய் மனவேதனையைத் தந்தார் என்கின்றது. அவர்கொண்ட வேடத்திற்கும் செயலுக்கும் பொருத்தமில்லை என்றபடி. ஓமம் - ஆகுதி. கோண் நாகணையான் - வளைந்த பாம்பைப் படுக்கையாகக்கொண்டவன். சேமம் - பாதுகாப்பு. சேடர் - கடவுள்.