சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
சடைமுயங்கு புனலன் - சடையில் கலந்திருக்கின்ற கங்கையை உடையவன். அனலன்-திருக்கரத்தில் அனலை உடையவன், உடைமுயங்கும் அரவு - ஆடையின் மேல் இறுகக்கட்டிய கச்சையாகிய பாம்பு. சதிர்வு - பெருமை. உழிதந்து - திரிந்து. ஊடத்தக்க ஒரு பெண்ணையும், அஞ்சத்தக்க எரி அரவு முதலியவற்றையும் அணிந்து திரிபவராயிருந்தும் எனது உள்ளத்தைக் கவர்ந்தார் என்றது, அவர்க்குள்ள பேரழகின் திறத்தையும், கருணையையும், எல்லாவுயிரையும் பகை நீக்கியாளும் வன்மையையும் வியந்தவாறு. கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. பிரமபுரத்தில் சடைமுயங்கு புனலனாய் உள்ளம் கவர்கின்ற தன்மையால் போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிய, சிறகன்னங்களும் தத்தம் பெடைகளை முயங்குகின்றன எனல், `அவனன்றி ஓர் அணுவும் அசையாது` என்பதை அறிவித்தவாறு.