கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!
நீர் - கங்கை, நிமிர்புன்சடை - நிறைந்த புல்லிய சடை, ஓர் நிலா வெண்மதி - ஒரு கலைப்பிறை, ஏர் - அழகு. வெள்வளை - சங்குவளை. சோர - நழுவ, அவன் மதியைச் சூடியிருத்தலின் விரகமிக்கு உடலிளைத்து வளைசோர்ந்தது என்பதாம். ஊர் பரந்த உலகு - ஊர்கள் மிகுந்த உலகு. மகாப்பிரளய காலத்து உலகமே அழிக்கப் பெற்றபோது, இத்தலம் மட்டும் அழியாது இருத்தலின் உலகிற்கே ஒருவித்தாக இருக்கின்றது சீகாழி என்பது. பேர் - புகழ்.