வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!
இதனால் இறைவன் அணிகளைக் கொண்டு அடையாளங்கள் அறிவிக்கப் பெறுகின்றன. முற்றல் ஆமை - ஆதி கமடமாதலின் வயது முதிர்ந்த ஆமை. ஆமை என்றது ஈண்டு அதன் ஓட்டினை. இளநாகம் என்றது இறைவன் திருமேனியையிடமாகக் கொண்ட பாம்பிற்கு நரை திரையில்லையாதலின் என்றும் இளமையழியாதநாகம் என்பதைக் குறிப்பிக்க.
ஏனம் - பன்றி; ஆதிவராகம். வற்றல் ஓடு - சதைவற்றிய மண்டையோடு. கலன் - பிச்சையேற்கும் பாத்திரம். பலி - பிச்சை, பெரியார்க்கிலக்கணம் கற்றலும் கேட்டலுமே என்பது. கற்றல் - உலக நூல்களை ஓதித் தருக்குவதன்று, இறைவன் புகழையே கற்று அடங்கல். கேட்டலும் அங்ஙனமே. இறைவன் புகழையன்றி வேறொன்றையுங்கல்லாத - கேளாத பெரியோர்களாலேயே இறைவன் தொழற்குரியன் என அதிகாரிகளையறிவித்தவாறு. `கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்` `கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை` என்பன ஒப்புநோக்கற்குரியன. `கற்றல் கேட்டலுடையார் பெரியார்` எனவே, உபலக்கணத்தால் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகூடல் முதலியனவும் கொள்ளப்பெறும். `கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்` என்பது சிவஞானசித்தியார். தமக்கு அருள் செய்தவண்ணமே தொழுதேத்தும் பெரியோர்க்கெல்லாம் அருள் வழங்கப் பெருமான் இடபத்தை ஊர்ந்தே இருக்கிறார் என்பதாம். பெற்றம் - இடபம்.