இதன் பொருள்:திருவளர் தாமரை திருவளருந் தாமரைப் பூவினையும்; சீர்வளர் காவிகள் அழகு வளரு நீலப் பூக்களையும்; ஈசர்தில்லைக் குருவளர் பூ குமிழ் ஈசர் தில்லைவரைப்பின் கணுண்டாகிய பூங்குமிழினது நிறம்வளரும் பூவினையும்; கோங்கு கோங்கரும்புகளையும்; பைங்காந்தள் கொண்டு செவ்விக் காந்தட்பூக்களையும் உறுப்பாகக் கொண்டு; ஓங்கு தெய்வ மரு வளர் மாலை ஒர் வல்லியின் ஒல்கி மேம்பட்ட தெய்வ மணம் வளரும் மாலை ஒருவல்லிபோல நுடங்கி; அன நடை வாய்ந்து அன்னத்தினடைபோல நடைவாய்ந்து; உரு வளர் காமன்தன் வென்றிக் கொடி போன்று ஒளிர்கின்றது வடிவுவளருங் காமனது வெற்றிக் கொடி போன்று விளங்காநின்றது; என்ன வியப்போ! என்றவாறு.
திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்றவாறு. திருமகடங்குந் தாமரையெனினுமமையும். பூங்குமி ழென்பது, முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்ற தோராகுபெயர். ஈசர் தில்லையென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. பல நிலங்கட்குமுரிய பூக்களைக் கூறியவதனால், நில மயக்கங் கூறியவாறாயிற்று. ஆகவே, பல நிலங்களினுஞ் சென்று துய்க்கு மின்பமெல்லாந் தில்லையின் வாழ்வார் ஆண்டிருந்தே துய்ப்ப ரென்பது போதரும். போதர, இம்மையின்பத்திற்குத் தில்லையே காரணமென்பது கூறியவாறாயிற்று. ஆகவே, ஈசர் தில்லை யென்றதனான், மறுமையின்பத்திற்குங் காரணமாதல் சொல்லாமையே விளங்கும். செய்யுளாதலாற் செவ்வெண்ணின்றொகை தொக்கு நின்றது. ஓங்கு மாலையெனவியையும். தெய்வ மருவளர்மாலை யென்றதனால், தாமரை முதலாயினவற்றானியன்ற பிறமாலையோடு இதற்கு வேற்றுமை கூறியவாறாம். வாய்ந்தென்பது நடையின் வினையாகலாற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்தது. உருவளர்காமன்றன் வென்றிக் கொடியென்றது நுதல் விழிக்குத்தோற்று உருவிழப்பதன் முன் மடியாவாணையனாய் நின்றுயர்த்த கொடியை. அன நடைவாய்ந்தென்பதற்கு அவ்வவ் வியல்பு வாய்ப்பப் பெற்றெனினுமமையும்.
திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மைநோக்க மென்றது அழகு. இஃதென் சொல்லியவாறோவெனின், யாவ னொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன்மேலவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்தவுருவும் நலனும் ஒளியுமெவ்வகையானும் பிறிதொன்றற்கில்லாமையால், திரு வென்றது அழகுக்கே பெயராயிற்று. அங்ஙனமாயின் இது செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; கோயிலைத் திருக்கோயிலென்றும், கோயில் வாயிலைத் திருவாயி லென்றும், அலகைத் திருவலகென்றும், பாதுகையைத் திருவடிநிலை யென்றும் வழங்கும் இத்தொடக்கத்தனவெல்லாந் திருமகளை நோக்கியெழுந்தனவல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே யெழுந்தது. ஆதலானுந் திருவென்பது அழகென்றே யறிக. அதனாற்றிருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமே. அல்லதூஉந் தான் கண்டவடிவின் பெருமையைப் பாராட்டுவானாகலான், ஒருத்தியிருந்த தவிசை இவளுக்கு முகமாகக் கூறுதல் வழுவாம். ஆதலாற் றான்கண்ட வடிவினுயர்ச்சியையே கூறினானாமெனக் கொள்க.
வளரென்பதற்கு வளருமென்றும்மைகொடுத்து உரை வாய்பாடு காட்டியதெற்றிற்கு மேலாலோ வளரக்கடவதென்பது கடா. அதற்குவிடை வளர்ந்த தாமரை வளராநின்ற தாமரையென்று கழிகாலத்தையும் நிகழ்காலத்தையுங்கூறாது, மேல்வருங்காலத்தைக் கூறவேண்டியது. கழிகாலத்தைக் கூறினாற் கழிந்ததனைக் கூறிற்றாம். நிகழ்காலத்தைக் கூறினால் முன்னும் பின்னுமின்றி இப்பொழு துள்ளதனைக் கூறிற்றாம். ஆகலான் வளருமென்று வருங்காலங் கூறியவாறன்று; மூன்று காலத்திற்கும் பொதுவாகிய சொற்றோன்றவே கூறினார். ஆயின் உம்மைச்சொன் மூன்று காலத்திற்கும் பொதுவாகி வந்தவாறென்னை?. இது செய்யுட் சொல்லாதலால் வந்தது. செய்யுளி னொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; அது ஞாயிறு திங்களியங்கும், யாறொழுகும், மலைநிற்கும் என்றற்றொடக்கத்தன வற்றானறிக. அன்றியும்,
முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை #9;
யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து ; ; ; ; ; மெய்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்
- தொல். சொல். வினை-43
என்றாராகலின், உம்மைச்சொல் வருங்காலத்தையே காட்டாது மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்குமென்றேயறிக.
இனித் திருமகடங்குந் தாமரை யெனினு மமையுமென்று அமைவுரைத்ததென்னை, இதனையுவமையாக்கக் குறையென்னை யெனின், திருமகளாலே தாமரையுயர்ந்ததாம். தாமரையினது சிறப்புக் கூறிற்றில்லையாம். என்னை, எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்குண்டாகையாலே திருமகளென்று பெயராயிற்று. அங்ஙனம் பெருமையுடையவளும் இதன் சிறப்பு நோக்கியேயிதனி லிருந்தாளல்லது தன்னாலேயிதற்குச் சிறப்புப்பெற வேண்டியிருந் தாளல்லள், ஆகலாற் றாமரைக் கொத்ததும் மிக்கதுமில்லை. அங்ஙனம் பெருமையுடையவளாலும் விரும்பப்பட்டதாகலான் திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்பது பெற்றாம்.
இனித் திருவளர்தாமரை சீர்வளர்காவி யென்றனபோல இதனையுங் குருவளர் குமிழென்னாது பூங்குமிழென்ற தெற்றிற் கெனின், முன்னும் பின்னும் வருகின்ற எண்ணிற் பூவைநோக்கியன்று, ஈண்டுச்செய்யுளின்பத்தை நோக்கியும் இதற்காகுபெயரை நோக்கியு மெனவறிக. அஃதென்போலவெனின், ``தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்`` (முல்லைக்கலி-1) என்பது போல. கோங்கென இதனை யொழிந்த நான்கிற்கு மடைகொடுத்து இதற்கடை கொடாதது பாலை நிலஞ் சொல்லுதனோக்கி. என்னை, பாலைக்கு நிலமின்றாகலான். ஆயின் மற்றைய நிலம்போலப் பாலைக்கு நிலமின் மையாற் கூறினாராகின்றார் மகளிர்க் குறுப்பிற் சிறந்தவுறுப்பாகிய முலைக்கு வமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடைகொடுக்கக் கடவதன்றோவெனின், அடைகொடுப்பிற் பிறவுறுப்புக்களுடன் இதனையுமொப்பித்ததாம். ஆகலான் இதற்கடைகொடாமையே முலைக்கேற்றத்தை விளக்கி நின்றது, அஃது முற்கூறிய வகையில் திருக்கோயில் திருவாயில் திருவலகு என்றவற்றிற்கு அடைகொடுத்து நாயகராகிய நாயனாரைத் திருநாயனாரென்னாதது போலவெனக் கொள்க.
இனி உடனிலைச் சிலேடையாவது ஒரு பாட்டிரண்டு வகையாற் பொருள் கொண்டு நிற்பது. அவ்விரண்டனுள்ளும் இத்திருக் கோவையின்கணுரைக்கின்ற பொருளாவது காமனது வென்றிக் கொடிபோன்று விளங்கி அன்னநடைத்தாய்த் தாமரையே நெய்தலே குமிழே கோங்கே காந்தளே யென்றிப்பூக்களாற் றொடுக்கப் பட்டோங்குந் தெய்வமருவளர்மாலையின் வரலாறு விரித்துரைக்கப் படுகின்றதென்பது. என்றது என்சொல்லியவாறோ வெனின், தாமரை மருதநிலத்துப்பூவாதலான் மருதமும், நெய்தல் நெய்தனிலத்துப் பூவாதலான் நெய்தலும், குமிழ் முல்லைநிலத்துப் பூவாதலான் முல்லையும், கோங்கு பாலைநிலத்துப் பூவாதலாற் பாலையும், காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூவாதலாற் குறிஞ்சியுமென இவ்வைந்து பூவினாலும் ஐந்திணையுஞ் சுட்டினார். ஆகலாற்றா மெடுத்துக் கொண்ட அகத்தமிழின் பெருமைகூறாது தில்லைநகரின் பெருமை கூறினார், நிலமயக்கங் கூறுதலான். அற்றன்று அஃதே கூறினார். என்னை, சொல்லின் முடிவினப் பொருண் முடித்த லென்னுந் தந்திரவுத்தியாற் புணர்தலும் புணர்தனிமித்தமுமாகிய குறிஞ்சியே கூறினார். என்னை, பைங்காந்தளென்று குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்தலான். அன்றியும் பூவினானே நிலமுணர்த்தியவாறு இத்திருக்கோவையின்கண் முன்னர்க் ``குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்`` (தி.8 கோவை பா.205) என்னும் பாட்டினுட் கண்டு கொள்க. அல்லதூஉஞ் ``சினையிற்கூறு முதலறிகிளவி`` (தொல் - வேற்றுமைமயங்கியல் - 31) என்னுமாகு பெயரானுமாம். ஆயின் குறிஞ்சியே கூறவமையாதோ நிலமயக்கங் கூறவேண்டியது எற்றிற்கெனின், ஓரிடத்தொரு கலியாணமுண்டா னால் எல்லாரிடத்து முண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத் துக்கூடி அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற்போலப் பல நிலங்களும் இக்குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன. உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையின், அன்பினானே நிகழ்ந்த காமப் பொருளைச்சுட்டினார். யாருங்கேட்போரின்றித் தன்னெஞ்சிற்குச் சொன்னமையின், கந்தருவரொழுக்கத்தையே யொத்த களவொழுக் கத்தையே சுட்டினார். ஈசர்தில்லை யென்றமையின், வீடுபேற்றின் பயத்ததெனச் சுட்டினார்.
களவொழுக்கமென்னும் பெயர்பெற்று வீடுபேற்றின் பயத்ததாய் அன்பினானிகழ்ந்த காமப்பொருணுதலிக் கந்தருவ ரொழுக்கத்தோடொத்துக் காமனது வென்றிக்கொடிபோன்று ஐந்திணையின்கண்ணும் வென்று விளங்காநின்ற கடிமலர்மாலையின் வரலாறு இத்திருக்கோவையின்கணுரைக்கப்படுகின்றதென்றவாறு. களவொழுக்கத்தினை ஒரு மாலையாகவுட்கொண்டு உருவகவாய் பாட்டா னுணர்த்தினாரென்பது. இன்பத்தை நுதலியதென்றா ராயினும், இன்பந் தலைக்கீடாக அறம் பொருள் இன்பம் வீடென நான்கு பொருளையும் நுதலிற்று. அவற்றுள் வீடுநுதலியவாறு மேலே சொன்னோம். ஒழிந்த மூன்றனையும் நுதலிய வாறென்னையெனின், ஈண்டுத் தலைமகனும் தலைமகளுமென்று நாட்டினார். இவனுக்கு ஆண்குழுவினுள் மிக்காருமொப்பாருமில்லை இழிந்தாரல்லது; இவளுமன்னள். இவர் ஒருவர்கண்ணொருவர் இன்றியமையாத அன்புடையராகலான், இவர்கண்ணே அம்மூன்றுமுளவாம். இவ் வொழுக்கத்தினது சுவைமிகுதி கேட்கவே விழைவு விடுத்த விழுமி யோருள்ளமும் விழைவின்கட்டாழுமாதலின், காமனது வென்றிக் கொடியெனவே வென்றிகொள்ளாநின்றது என்றானென்பது. முதற்கட் கிடந்த இப்பாட்டுக் காட்சியின்மேற்று. இப்பாட்டால் வேட்கை இவன்கணுண்டாயவாறென்னை பெறுமாறெனின், உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையிற் பெற்றாம்.
உவகைமிகுதியாற் சொன்னானாகலின், இப்பாட்டிற்கு மெய்ப்பாடு: உவகை. உவகையாவது சிருங்காரம்; அது காமப் பொருண் முதலாய வின்பத்தின்மேற்று. உவகையென்பது காரணக்குறி, உவப்பித்தலினுவகையாயிற்று. உவந்த நெஞ்சினனாய் அவளையோர் தெய்வப் பூமாலையாக வுருவகங்கொண்டு காமனது வென்றிக்கொடியோடுவமித்துச் சொன்னானென்பது. என்னை மாலையாமாறு,
பூப்புனை மாலையு மாலைபுனை மாதருந்
தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியுங்
கோச்சேரன் பெயருங் கோதையென் றாகும்
-திவாகரம், 11ஆவது
என்பதனாற் பெண்ணுக்கு மாலையென்று பெயராயிற்று. ஆயின் யாரொருவரையுங் கேசாதி பாதமாதல் பாதாதிகேசாமாதல் வருணிக்கவேண்டும். அவற்றுள், இது கேசாதிபாதமாக வருணிக்கப் பட்டது. என்னை, திருவளர் தாமரை யென்று முகமுதலாகவெடுத்துக் கொண்டு அன்னநடையென்று பாதத்திலே முடித்தலான். ஆயின், இதில் நடைகண்டானாயின் மேல் ஐயநிலையுணர்த்தல் வழுவா மெனின், இவன் நடைகண்டானல்லன், இம்மாலை நடக்குமாயின் அன்னநடையையொக்குமென்றான். வாய்ந்தென்பது நடையின் வினையாகலிற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்த தென்றது அன்னத்திற்குச்சினை கால், காலிற்கு வினை நடை, ஆகையால் முதலென்றது அன்னத்தை.
அங்ஙனமுவமித்துச் சொன்னதனாற் பயன் மகிழ்தல். என்னை, ``சொல்லெதிர் பெறாஅன் சொல்லியின் புறுதல், புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே`` (தொல். பொருள். அகத்திணை - 50) என்று அகத்திணையியற் சூத்திரத்திற் சொன்னாராகலினென்பது.
அஃதேல் உவகையென்னும் மெய்ப்பாட்டானே மகிழ்ச்சி பெற்றாம். இனியிச்சொற்கள் விசேடித்து மகிழ்வித்தவா றென்னை யெனின், நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து தான் வேட்ட பொருள் வயிற் றன்குறிப்பன்றியேயுஞ் சொன்னிகழும்; நிகழுந் தோறும் மகிழ்ச்சி தோன்றுமென்பது. என்போல வெனின், ஒருவன் தான்வழிபடுந் தெய்வத்தைப் பரவிய செய்யுட்களை யோதியுணர்ந் திருந்தானெனினும், அவற்றான் அத்தெய்வத்தை வழிபடும்போழ்து கண்ணீர்வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் காண்டும். அல்லதூஉஞ் சுற்றத்தாரது சாக்காடு முற்றவுணர்ந்தானேயெனினுஞ் செத்தாரிடனாக உரையாடினபொழுது துன்பமீதூரக் கலுழக்காண்டும்; இவை போலவென்பது. ஆகலின் நினைப்பின்வழியதுரையாயினும் நினைப்பின் உரைப்பயன் விசேடமுடைத்தென்பது.
நெஞ்சின்மிக்கது வாய்சோர்ந்து சொன்னிகழுமென்பதனை இக்கோவையின் எண்வகை மெய்ப்பாட்டின்கண்ணுந் தந்துரைத்துக் கொள்க. பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயினிகழ்ந்த சொல்லானெய்துவது. மெய்ப்பாடென்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின் கட்டோன்றிய விகாரத்தின் விளைவு. எழுவாய்க் கிடந்த இப்பாட்டு நுதலிய பொருள் பொழிப்பினாலுரைத்தாம். நுண்ணிதாக வுரைப்பான்புகின் வரம் பின்றிப் பெருகுமென்பது.
1.1. காட்சி
காட்சி என்பது தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃதொருவியப் பென்னென்றல். அதற்குச் செய்யுள்
1.1 மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர்வேலவன் கண்ணுற்றது.
திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி யெடுத்துக் கொண்டாரோவெனின்,
அறிவோ னறிவில தெனவிரண் டாகு
நெறியினிற் றொகைபெற்று நிரல்பட விரிந்த
மண்புன லனல்வளி மாவிசும் பெனாஅ
வெண்மதி செஞ்சுடர் வேட்போ னெனாஅ
வெண்வகை நிலைஇய வெவ்வகைப் பொருளுந்
தோற்றநிலை யிறுதி கட்டுவீ டென்னு
மாற்றருஞ் செயல்வழி மாறாது செயப்பட்டு
வெருவா வுள்ளத்து வேட்போன் றான்செய்
யிருவினைப் பயன்றுய்த்து மும்மல னொரீஇப்
பொருவறு சிவகதி பொற்பினிற் பொருந்தவு
மேனைய தத்தங் குணநிலை புணரவு
நிலைஇ யவ்வயி னிமித்த மாகி
யலகு தவிர்த்த பலவகை யண்டமு
மின்னுழை வெயிலின் றுன்னணுப் புரைந்து
தன்னு ளடங்கவுந் தானவற் றுள்ளு
நுண்ணுணர் வாயு நோக்கரு நுழையிற்
சிறுமை பெருமைக் கிருவரம் பெய்திப்
போக்கும் வரவும் புணர்வு மின்றி
யாக்கமுங் கேடு மாதியு மந்தமு
நடுவு மிகந்து ஞானத் திரளா
யடியு முடியு மளவா தயர்ந்து
நெடியோ னான்முக னான்மறை போற்ற
வெரிசுடர்க் கனலியி னீங்காது விரிசுடர்
வெப்பமும் விளக்கமு மொப்பவோர் பொழுதினிற்
றுப்புற வியற்றுவ தெனவெப் பொருளுங்
காண்டலு மியற்றலு மியல்பா மாண்டுடன்
றன்னினீங் காது தானவின்று விளங்கிய
வெண்ணெண் கலையுஞ் சிலம்புஞ் சிலம்படிப்
பண்ணமை தேமொழிப் பார்ப்பதி காண
வையா றதன்மிசை யெட்டுத்தலை யிட்ட
மையில் வான்கலை மெய்யுடன் பொருந்தித்
தில்லை மூதூர்ப் பொதுவினிற் றோன்றி
யெல்லையி லானந்த நடம்புரி கின்ற
பரம காரணன் றிருவரு ளதனால்
திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர்
ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச்
செம்புலச் செல்வ ராயினர் ஆதலின்
அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென
இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர்
ஆங்கவ் விரண்டனுள்
ஆகமநூல் வழியி னுதலிய ஞான
யோகநுண் பொருளினை யுணர்த்து தற்கரி
துலகநூல் வழியி னுதலிய பொருளெனு
மலகி றீம்பாற் பரவைக் கண்ணெம்
புலனெனுங் கொள்கலன் முகந்த வகைசிறி
துலையா மரபி னுரைக்கற் பாற்று.
அஃதியாதோவெனின், எழுவாய்க்கிடந்தபாட்டின் பொருளு ரைக்கவே விளங்கும். அஃதேல், இப்பாட்டென்னுதலிற்றோவெனின், அறம், பொருள், இன்பம், வீடென்னு நான்கு பொருளினும் இன்பத் தை நுதலி இத்திருக்கோவையின்கணுரைக்கின்ற களவியற் பொருளி னது பொழிப்பிலக்கணத்தையும், அதற்குறுப்பாகிய கைக்கிளைத் திணையின்கண் முதற்கிடந்த காட்சியென்னும் ஒருதலைக் காமத்தினையும், உடனிலைச் சிலேடையாகவுணர்த்துதனுதலிற்று.
திருவளர்தாமரை... போன்றொளிர்கின்றதே.
மதிவாணுதல்... கண்ணுற்றது.