ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற, வெற்றியையுடைய மன்மதன் சாம்பலாகுமாறு, செந்நிறமான அழகிய நெற்றிக் கண்ணைத் திறந்த சிவமூர்த்தியாகிய, கருமை பொருந்திய கண்டத்தையும், நீண்ட சடையினையும் உடைய, எங்கள் அரிய அமுதம் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து, நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன் ; விரையச்சென்று அவனை வணங்குவேன்.
` வண்ணம் ` என்பது, வகையைக் குறித்தது. ` மன்மதன் ஐந்து வகையான மலர்களையே அம்பாக உடையவன் ` என்பதும், அம் மலர்கள், ` தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் ` என்பதும், அவை முறையே, ` உன்மத்தம், மதனம், மோகம், சந்தாபம், வசீகரணம் ` என்னும் பெயருடையனவாய், ` சுப்பிர யோகம், விப்பிர யோகம், சோகம், மோகம், மரணம் ` என்னும் அவத்தைகளைச் செய்யும் என்பதும், அவ்வவத்தைகள்தாம், பேச்சும் நினைவும், மிகுதலும், பெருமூச்செறிதலும், உடல் வெதும்பி உணவை வெறுத்தலும், அழுது பிதற்றுதலும், மூர்ச்சையுறுதலுமாம் என்பதும் செய்யுள் வழக்காதலின், அவை எல்லாம் அடங்க, ` ஐவணமாம் பகழியுடை ` என்றும், அவனை வென்றார் உலகத்து அரியராகலின், ` அடல் மதனன் ` என்றும், அவனை எளிதில் அழித்தமை தோன்ற, ` பொடியாகச் செவ்வணமாந் திருநயனம் தீவிழித்த சிவமூர்த்தி ` என்றும், அம்மூர்த்தியைப் பிரிந்து இங்கே இருப்பேனாயின், அவனது இன்பத்தை யுணராத பிறர் போல யானும் அம்மன்மதனால் வெல்லப்பட்டேனாவேன் ` என்பார். ` எம் ஆரமுதை என் ஆரூர் இறைவனை எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் ` என்றும் அருளினார். மன்மதனது வெற்றிப் பாட்டினை, கந்த புராணத்துக் காமதகனப் படலத்துள், அவனே கூறு மாறாய் வந்த வற்றான் அறிக.