சார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லா வற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். பிறப்பால் குடிமை நல்லேன் ஆயினும் என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.
இத்திருத்தாண்டகம், நாயனார், சமண் சமயம் சார்ந்திருந்த காலத்தில் இருந்த தம் நிலையை நினைந்து இரங்கி யருளியது.
குலம் - கூட்டம்; இனம். நாயனார், முன்பு சேர்ந்திருந்தது சமணர் கூட்டத்தில் ஆகலின், அதனை, `பொல்லேன்` என்றார். பொல்லேன் - தீயேன்; `இல்லாதது, இல்லாது, இல்லாத இல்லார்` என்னும் சொற்கள், `இல்` என்பது அடியாக வருதலின், `பொல்லாதது, பொல்லாது, பொல்லாத பொல்லார்` என்னும் சொற்கட்கு அடிநிலை, `பொல்` என்றே கொள்க. இஃது, `இல், இன்மை, இல்லாமை` என்றாற் போல வாராதாயினும், `பொல்லாங்கு, பொல்லாப்பு` எனவரும் என்க.
காத்து ஆள்பவரது (தமக்கையாரது) காவலை இகழ்ந்து சென்று குண்டரோடு கூடினமையின், `குணம் பொல்லேன்` என்றார். குறி - குறிக்கோள்; அது, தலைமயிரைப் பறித்தல் முதலியவற்றால் உடம்பை வருத்தி யொழிதலாகவே இருந்தமையின், `பொல்லேன்` என்றார். மக்களில் பலர் செய்கையால் தீயாராயினும் குறிக்கோள் அளவில் நல்லராதல் உண்டு; அவ்வாறும் இல்லை என்பார், ``குறியும் பொல்லேன்`` எனச் சிறப்பும்மை கொடுத்தோதினார். ``குற்றம்`` என்றது, குற்றமாகிய செயலை; அவை, `கடவுள் இல்லை` என்றல் முதலியன. கோலம் - வேடம். துறந்தார்க்கு அவரது வேடம் அவர்க்கும் பிறர்க்கும் நலம் பயப்பதொன்றாகலின், ``கோலமாய நலம்`` என்றும், அதுதான், உலகத்தார் கண்டோடிக் கதவடைக்கும் கோலமாய் இருந்தமையின், ``பொல்லேன்`` என்றும் ஓதினார்; நலம் பயப்பதனை, `நலம்` என்று அருளினார். `நான் பொல்லேன்` என்றது, ``குணம் நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் - மிகைநாடி மிக்க கொளல்`` (குறள். 504) என்றவாறு, `சிலவற்றாற் பொல்லேனாகாது, எல்லாவற்றாலும் பொல்லேனாயினமையின், யாவராலும் பொல்லேனாக ஒதுக்கப்பட்டேன்` என்றதாம். ``ஞானி அல்லேன்`` எனவும், ``நல்லாரோடு இசைந்திலேன்`` எனவும் அருளியது, `என்னை ஞானி எனவும், என்னால் இசைய (கூட)ப் பட்டாரை நல்லார் எனவும் மயங்கினேன்` என்றவாறு.
நடுவே நின்ற விலங்கு - மனவுணர்வுடைய மக்கட்கும், அஃது இல்லாத பிற உயிர்கட்கும் இடையே நிற்கின்ற ஒருசார் விலங்குகள்; அவை யானை, குரங்கு முதலாயின. மக்கட்கேற்ற சிறப்பு மன உணர்வுடைமையால், ``நடுவே நின்ற விலங்கல்லேன்`` என்றும், அச்சிறப்புணர்வினாற் பயன் கொள்ளாது ஒழிந்தமையால், ``விலங்கல்லாது ஒழிந்தேனல்லேன்`` என்றும் அருளினார்.
``நடுவே நின்ற`` என்றது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம்; இயைபின்மை நீக்கிய விசேடணமாகக்கொள்ளின், அதனாற் போந்த பயன் இன்றாதல் அறிக. தொல்காப்பியத்துள்,
``மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே`` (தொல். மரபியல் - 33)
என்னும் சூத்திரத்தின்பின்,
``ஒருசார் விலங்கும் உளஎன மொழிப`` (தொல். மரபியல் - 34)
என்னும் சூத்திரத்தைப் பாடம் ஓதி, `இதுவும் அது` என, கருத்துரையை மேலைச் சூத்திரக் கருத்துரையொடு மாட்டெறிந்து, `விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராம் என்றவாறு` எனப் பொழிப்புரைத்து, `அவையாவன, கிளியும் குரங்கும் யானையும் முதலாயின` என எடுத்துக்காட்டும் காட்டிப் போந்தார், இளம்பூரண அடிகள்; ஆயினும் அச்சூத்திரத்தைப் பேராசிரியர் பெற்றிலாமையின், அதன் பொருளை, மேலைச் சூத்திரத்துள், ``பிறப்பு`` என்றதனாற் கொண்டார். இவற்றால், `விலங்கினுள் ஒரு சாரன மன உணர்வுடையன` என்பது இனிது விளங்கிற்று.
வெறுப்பன - வெறுக்கத்தக்க சொற்கள்; அவை, `பொய், புறங்கூற்று, கடுஞ்சொல், பயனில்சொல்` என்பன. `வெறுப்பனவும்` என்னும் உம்மை, `மேலனவற்றோடு இவையும் வல்லேன்` என, இறந்தது தழுவிற்று. ``மிகப் பெரிதும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. `இல்லம்` என்பது, `இலம்` என இடைக் குறைந்து நின்றது; `குடிமை` என்பது பொருள். `பிறப்பால் குடிமை நல்லேனாயினும், எனது செயல்களால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன்` என்பார், `இலம் பொல்லேன்` எனவும், அச்செயல்கள்தாம் இவை என்பார், ``இரப்பதே ஈயமாட்டேன்`` எனவும், அருளிச்செய்தார். இச்செயல்களால் அறிவுடையோர், `இவன் குலனுடையானாயின், இலன் என்னும் எவ்வம் உரைத்தலும், ஈயாமையும் உடையவன் ஆகா னன்றே` (குறள் - 223.) என என் குடிமையை இகழ்வாராயினர் என்றவாறு. ``தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் - தோன்றலிற் தோன்றாமை நன்று`` (குறள் - 236) என்றபடி, `இவ்வாறு எல்லா வற்றாலும் யாவரினும் கடைமையை எய்திய யான் எதற்கு மனிதனாய்ப் பிறக்கவேண்டும்` என்பார், ``என்செய்வான் தோன்றினேன் ஏழையேன்`` என்று அருளினார்.
``குலம் பொல்லேன்`` முதலியன, பண்பு முதலியவற்றின் தன்மையை அதனை உடைய பொருள்மேற் சார்த்தி யுரைத்தனவாம். இதனுள், ``குலம் பொல்லேன்`` என்பது முதலாக, ``விலங்கல்லா தொழிந்தே னல்லேன்`` என்பது ஈறாக உள்ளனவற்றை: சமணரொடு கூடியிருந்த நிலைபற்றி ஓதினார்; அதனால், அவற்றின்கண் உள்ள வினைக்குறிப்பு முற்றுக்கள், `பொல்லேனாகி யிருந்தேன்` என்றாற் போல இறந்தகாலக் குறிப்பினவாம். ஏனையவை, எஞ்ஞான்றும் தம்பால் உள்ள நற்பண்புகளால் தாம் அமையாது அருளிச்செய்தனவாம். இவை யாவும், `இறைவன் தனது பெருங்கருணையால் என்னை வலிந்து ஆட்கொள்ளாதொழியின், என் நிலையாதாய் முடியும்` என நினைந்து இரங்கியருளியனவேயாம் என்க.