கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?
இத் திருத்தாண்டம் இறைவனது தன்வயமுடைமையை உணர்த்து முகத்தால், உயிர்களிடத்து நிகழும் அவனது கைம்மாறற்ற உதவியை அருளிச்செய்தது.
ஆட்டுவித்தலாவது, உயிர்களை அவற்றது, `யான் எனது` என்னும் செருக்குக் காரணமாகப் பல்வேறு உடம்பாகிய பாவையுட் படுத்து, வினையாகிய கயிற்றினால் கீழ் மேல் நடு என்னும் உலக மாகிய அரங்கினிடத்து, வினையை ஈட்டியும் நுகர்ந்தும் சுழலச் செய்த லாகிய கூத்தினை இயற்றுவித்தல். ``கோனாகி யான் எனதென்றவ ரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே`` (தி.8 திருவா. திருச்சதகம். 15.) என்றருளிச்செய்தார், மாணிக்கவாசகரும். இவ்வாறு ஆட்டுவித்தல், உலகத்தைப் படைத்தலும் காத்தலும் ஆகிய தொழில்களால் ஆவதாகும்.
அடக்குவித்தல், மேற்கூறியவாறு ஆட்டுவித்தலால் ஆடி வரும் உயிர்கட்கு எய்ப்புத் தோன்றாதவாறு, ஆடலை இடையே சிறிது காலம் நிறுத்தி, யாதும் செய்யாதவாறு அமைந்திருக்கச் செய்தல்; இஃது, உலகம் முழுவதையும் அழிக்கும் முற்றழிப்பினால் நிகழும்.
ஓட்டுவித்தலாவது, பின் நின்று ஆட்டுவிக்கின்ற தன்னை உள் நோக்கி உணராவண்ணம் உயிர்களைப் பிற பொருள்களை நோக்கிப் புறத்தே ஓடுமாறு ஓட்டுதல்; இது, `மறைத்தல்` என்னும் தொழிலினால் ஆவதாகும்.
உருகுவித்தலாவது, புறமே ஓடிப் பயன் காணாது உவர்ப் பெய்திய உயிர்களைப் பின்னர் உள்நோக்கித் தன்னை உணருமாறு செய்து, தன்னையும் தனது உதவியினையும் நினைந்து நினைந்து அன்பு கூர்ந்து மனம் உருகுமாறு செய்தல்.
பாட்டுவித்தலாவது, அவ்வுருக்கத்தின்வழித் தோன்றும் வாழ்த்துக்களையும் புகழ்ச்சிகளையும் வாயார எடுத்துப் பாடுமாறு செய்தல். இப்பாட்டுக்கள் தாமே பாடுவனவும், முன்னுள்ளனவுமாய் அமையும்.
பணிவித்தலாவது, அன்புமிக்கெழுந்து பெருக தன்முனைப்பு அடியோடு நீங்குதலால், தன்முன்னே நிற்றல் இன்றி, நிலஞ்சேர வீழ்ந்து பணியச்செய்தல். உருகுவித்தல் முதலிய மூன்றும் முறையே மன மொழி மெய்கள் என்னும் மூன்றும் தன்வழி (இறைவழி)ப் படச் செய்விப்பனவாதல் காண்க. இம் மூன்றும், `அருளல்` என்னும் தொழிலால் அமைவன. மறைத்தலும் அருளலும் ஆகிய இத் தொழில்களைக் குறித்தே.
``போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்``
(தி.8 திருவா. சிவபு. 43.)
எனவும்,
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
(தி.8 திருவா. திருவண். 52.)
எனவும் அருளிச்செய்தார், ஆளுடைய அடிகள்.
``காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே`` என்றது, `உயிர்கள் உன்னைக் காணாமை, நீ காட்டுவியாமையேயாம் எனவும், ``காண்பாரார் காட்டாக்கால்`` என்றது, `நீ காட்டுவியாத பொழுது, உயிர்கள் தாமே உன்னைக் காண வல்லன அல்ல` எனவும், `உயிர்கள் இறைவனைக் காண்டல் அவன் அருளால் அன்றி ஆகாது ஆதலின்` முத்திக் காலத்திலும் உயிர்கட்கு முதல்வனது உதவி இன்றியமையாதது` என்பதனை உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்து இனிது விளங்க அருளிச்செய்தவாறு.
நெற்றிக்கண், இறைவனது இயற்கைப்பேரறிவினை உணர்த்து மாதலின், ``கண்ணுதலாய்`` என விளித்தருளியது, காட்டுதல் முதலிய பலவற்றிற்கும் உரிய இயைபு உணர்த்தப்பட்டது என்க.
``கண்ணுதலாய்`` என்பதனை முதற்கண் வைத்து, `நீ` என்னும் சொல்லெச்சத்தினை, ஆட்டுவித்தல் முதலிய எல்லாவற்றிற்கும் வருவிக்க. இறைவன், உயிர்களைத் தொழிற்படுத்துதல் பெத்த காலத்தில் திரோதான சத்தியும், அதன் வழித்தாயவினையும், அதன் வழியராகிய காரணக் கடவுளரும் முதலிய வாயில்களாலும், முத்திக் காலத்தில் அருட்சத்தி வாயிலாலும் ஆகலின், `ஆட்டினால், ஓட்டி னால்` என்பனபோல அருளாது, `ஆட்டுவித்தால் பாட்டுவித்தால்` முதலியனவாக அருளினார். அதனால், இறுதிக்கண், ``காட்டாக்கால்`` என்றதற்கும், `காட்டுவியாக்கால்` என்றலே திருவுள்ளம் என்க.
`பாடுவிப்பித்தால்` என்றே ஓதற்பாலதாயினும், செய்யுள் இன்பம் நோக்கி, `பாட்டுவித்தால்` என்று அருளிச்செய்தார். இன்றியமையாமை நோக்கி இவ்வாறு சொற்களை ஆக்கி அளித்தல், தலைவராயினார்க்கு உரியது; அதனால், அச்சொல், ஆசிரியரது ஆணையாற் கொள்ளப்படுவதொன்றாம் என்க. இனி, `பாடுவிப்பித் தால்` என்பதே, எதுகை நோக்கி வேண்டும் விகாரங்கள் எய்தி, `பாட்டு வித்தால்` என நின்றது என்றலும் ஒன்று.