திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய். இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய். மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய். இமவான் மருமகனாய் உள்ளாய். உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய். எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய். உலகில் உள்ள ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலிய யாவுமாகியுள்ளாய்.
` ஒசை, ஒலி ` என்பன, ` சத்தம், நாதம் ` என்னும் பொருளுடையன. ` வெற்றோசையும் பொருளோசையும் ` என ஒசை இருவகைப்படும். அவற்றுள், வெற்றோசையை ` ஒசை ` என்றும், பொருளோசையை ` ஒலி ` என்றும் அருளிச்செய்தார். பொருளோசை, எழுத்தும் சொல்லுமாக அறியப்படும், ` எழுத்து ` என்பதும், ` சொல் ` என்பதும் உண்மையில் முறையே பொருள் உணர்வாகிய ஆற்றலும், அவ்வாற்றலின், கூட்டமுமேயாகும். ஆயினும், அவ்வாற்றலை எழுப்புகின்ற அளவுபட்ட ஓசையும் , அவற்றது கூட்டமும் ஆகுபெயரால், ` எழுத்து ` என்றும், சொல் என்றும் சொல்லப்படுகின்றன. இதுவே, ` எழுத்துக்களின் தன்மை ` எனப்படுவது. ` இதனை ஆசிரியர் தொல்காப்பியனார் நமக்கு உணர்த்தலாகாமையின் உணர்த்திற்றிலர் ` என்பர் உரையாளர். எழுத்துக்கள் புணர்ச்சிக் கண் ஓன்று வேறொன்றாதலை, ` மெய்பிறிதாதல் ` எனக் குறியிட்டு. ( தொல். எழுத்து . 110.) அவ்வாறே பலவிடத்தும் ஆண்டமையின், பொருளுணர்த்தும் ஆற்றலே உண்மை எழுத்தென்பதும், ஓசை அதற்கு நிமித்தம் என்பதும் அவ்வாசிரியரது கருத்தாதல் தெளிவு. இனி, அவ்வாற்றலைப் புலப்படுக்கும் ஓசையை, ` மெய்தெரி வளியிசை ` ( பொருளைத் தெரிவிக்கும் காற்றொலி ) என விளக்கினார் ( தொல். எழுத்து. 103.) அதனால் அவற்றை ` எழுத்து ` என்றும், அவற்றது கூட்டத்தைச் ` சொல் ` என்றும் கூறுதல் பான்மை வழக்கே என்பதும், ஆயினும், எழுத்துக்களது உண்மைத் தன்மை உலகத்தார்க்கு இனிது விளங்காது அவைதாமே எழுத்தும் சொல்லுமாய் நிற்றல் பற்றி செவ்வன் வழக்காகவே ஆளப்படுவது என்பதும் விளங்கும்.
யாழின் நரம்புகள் ஒரோர் அளவிற்பட்டு நின்று, கேட்டற்கு இனியவாய் இசையுமாறு எழுப்ப எழுந்து ` இசை ` என்னும் காரணக் குறிபெறும் ஓசைபோல, அளவிற்பட்டுப் பொருளுணர்வு தோன்றுமாறு இசைந்து நிற்கும் ஓசையும் ` இசை ` எனப்படுதலின் ` ` ஓரள பிசைக்கும் குற்றெழுத்தென்ப ` ` ஈரள பிசைக்கும் நெட்டெழுத்தென்ப ` ( தொல். எழுத்து. 3.4 .) என்றாற் போல எழுத்தையும், ` மெய்தெரி வளியிசை `, ( தொல். எழுத்து. 103 ) ` ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே ` ` உயர்திணை மருங்கிற் பால்பிரிந்திசைக்கும் ` ( தொல். சொல். 1,4 .) என்றாற்போலச் சொல்லையும், ` இசை ` யென வழங்குவர் ஆசிரியர்.
மெய்தெரி வளியிசை, உயிர்வளியின் ( பிராணவாயுவின் ) இயக்கத்தால் புறத்துப்போந்து உரத்து இசைத்தலும், அஃது இன்றி, எழுவளி ( உதான வாயு ) அளவில் அகத்து மிடற்றின் கண்ணே நின்று மெல்ல இசைத்தலும் ஆகிய இருநிலையை உடைத்து என்பதும், அவற்றுள் புறத்திசைக்கும் நிலையே இயற்றமிழ் நூலுள் எழுத்தெனவும், சொல்லெனவும் எடுத்து வரையறை கூறப்பட்ட தென்பதும், ஏனை அகத்திசைக்கும் நிலை மெய்ந்நூலுள்ளே ( தத்துவசாத்திரத்துள் ) வரையறுத் துணர்த்தப்படும் என்பதும் தொல்லாசிரியர் துணிபென்பது,
` எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே `
எனவும், ( தொல். எழுத்து. 102).
` அஃதிவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே `
( தொல். எழுத்து. 103.) எனவும் ஓதியவாற்றான் அறியப்படும்.
` சொல்லை வாக்கு ` என்றலின், அகத்தெழு வளியிசையை, ` மத்திமை வாக்கு ` எனவும், புறத்திசைக்கும் வளியிசையை, ` வைகரி வாக்கு ` எனவும் மெய்ந்நூல் கூறும்.
இனி ; சொல், அகத்தெழு வளியொடும்படாது நினைவின் கண்ணே நிற்கும் நிலையும் உண்டு ; அது, ` பைசந்தி வாக்கு ` எனவும், சொல் இவ்வாறெல்லாம் வெளிப்படாது தன்னியல்பில் நிற்கும் நிலை ` சூக்கும வாக்கு ` எனவும் சொல்லப்படும். இவற்றுள் சூக்கும வாக்கே ` நாதம் ` எனப்படுவது.
இதனையே சிலர், ` நாதப் பிரமம் ` எனக் கடவுளாகக் கூறுவர் ; அது, சொல்லும் சடமே என்பது உணராதாரது கூற்றேயாமென்க. உணர்வுடையோர், கூற்றாயின், உண்மை என்னாது, ` அன்னம் பிரமம் ` ( தைத்ரீயம் ) என்பதுபோல உபசாரம் என்க.
இங்ஙனங் கூறியவாற்றால், ` ஓசை` எனப்பட்டதும், ` ஒலி ` எனப்பட்டதும் வேறு வேறு என்பது விளங்கிற்று.
ஒருவன் - ஒப்பற்ற தவைன். பொன், மணி முதலியன போல நறுமணங் கமழும் மலர்களும் உலகப் பொருள்களுட் சிறப்புடையன வாகலான் அவைகளை எடுத்தோதியருளினார்.
மலையான் - மலையரசன். சுவாமிகளுக்கு இறைவன் திருநல்லூரில் திருவடி சூட்டினமையை அவரது புராணத்துட் காண்க. தேச விளக்கு - உலகில் உள்ள ஒளிப்பொருள்கள் ; அவை ஞாயிறு, திங்கள், தீ முதலியன. செம்பொற்சோதீ - செம்பொன்னினது ` ஒளிபோன்றுள்ளவனே ; சோதி, உவமையாகுபெயர். ` ஆனாய் ` முதலிய பலவும் வினைப்பெயர்கள். அவை எழுவாயாய் நின்று நீயே என்னும் பெயர்கொண்டு முடிந்தன ; ஏகாரங்கள், ` பிறரல்லர் ; நீ ஒருவனே ` எனப் பிரித்து நின்ற பிரிநிலை.