இடைமருது மேவிய ஈசனார் உயிர்களை விட்டு நீங்காத பத்து இயற்கைப் பண்புகளாகவும், உயிர்களுக்கு மலச் சார்பினால் வரும் பதினொரு செயற்கைப் பண்புகளாகவும், பரம் பொருளுக்கு என்று ஒருகால் தொகுத்துச் சொல்லப்படும் நான்கு பண்புகளாகவும், பிறிதொருகால் சொல்லப்படும் ஆறு பண்புகளாகவும் உள்ளனவற்றையும் மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்து உணரப்படும் பொதுவான ஐம்பண்புகளையும் ஐவகை சமித்துக்களையும், திருவைந்தெழுத்தையும் உயிர்கள் சென்று சேரக்கூடிய வழிகள் ஐந்தையும் குறிப்பிட்டு ஞானப்பிரகாசமாகிய ஒளியை உடைய அடியவர்களின் உள்ளத்தாமரையில் உலவிவருபவராவார்.
` உயிர்கட்குப் பிரியாத (நீங்காத) குணம் என்றது, அதன் இயற்கைத் தன்மையை. அத்தன்மை பத்தாவன இவையென்பது அஞ்ஞான்று வழக்கின்கண் இருந்ததாகல் வேண்டும். ஆயினும் இக்காலத்து அறியப்படாமையால் பின்வருமாறு கூறலாம். இறைவனது எண்குணங்கட்கு மறுதலையான தன்வயமின்மை, சார்ந்ததன் வண்ணமாதல், அறிவிக்கவே அறிதல், ஒவ்வொன்றையே உணர்தல், படிமுறையான் உணர்தல், பெரிதும் சிறிதுமின்றி இடைநிகர்த்ததாதல், இன்னாதது வெறுத்தல், இனியது உவத்தல் என்னும் எட்டும், தனித்துநில்லாமை, தனித்துணரப்படாமை என்னும் இரண்டுமாம். உயிர்கட்குப் பிரிவுடைய (நீங்கத்தக்க) குணம் என்றது மலச்சார்பினால் வரும் செயற்கைத் தன்மையை. அவை பதினொன்றாவன, `பேதைமை, புல்லறிவாண்மை, அமைதி, வெகுளி, மடி, இன்ப நுகர்ச்சி, துன்பநுகர்ச்சி, நுகர்ச்சியின்மை, நன்முயற்சி, தீமுயற்சி, ஊக்கமின்மை என்பன. பேதைமையை, `கேவலநிலை` என்றும், புல்லறிவாண்மையை, `சகலநிலை` என்றும், அமைதி முதலிய மூன்றை, `சத்துவம், இராசதம், தாமதம்` என்றும் மெய்ந் நூல்கள் கூறும். சத்துவம் முதலிய முக்குணங்கள் காரணமாக, இன்ப நுகர்ச்சி முதலிய மூன்றும் உளவாகும். பின்னர் அவற்றால், நன்முயற்சி முதலிய மூன்றும் உளவாகும். மலச்சார்பு நீங்கிய விடத்து இவை அனைத்தும் நீங்குமென்க. பிரியாத குணம், பிரிவுடைய குணம்` என்பவற்றை, முன்னர், `உயிர்கட்கு` என விதந்தருளிச் செய்தமையால், பின்னர், ``விரியாத குணம்`` என்றருளியது, இறைவர்க்கென்பது பெறப்படும். விரியாத குணம் - தொகுத்துக் கொள்ளப்படும் குணம். அவை நான்காவன, `உண்மை, அறிவு, இன்பம் (சத்து, சித்து, ஆனந்தம்), அருள்` என்பன. பிற நெறிகள் அருள் ஒழிந்த மூன்றையே கூறுமாயினும், சிவநெறியுள் `அருள்` என்பதும் இன்றியமையாததென்க. `அருள்உண்டாம் ஈசற்கு அது சத்தி அன்றே`` (சிவஞானபோதம். சூ.5. அதி. 2) என்றதும் நோக்குக. `ஒருகால்` என்றமையால்; `மற்றொரு கால்` என்பது வருவிக்கப்படும். `விரிவிலா என்றது. `விரியாத` என மேற்போந்ததனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது. எனவே, அவரது குணங்களைத் தொகுத்துக் கூறுமிடத்து நான்காகக் கூறுதல் ஒருமுறை எனவும், அவைகளை ஆராயுமிடத்து ஆறாகக் கூறுதல் மற்றொரு முறை எனவும் அருளியவாறாம். அறுகுணங்களாவன `முற்றுணர்வு, வரம்பிலின்பம், இயற்கையுணர்வு. தன்வயம், முடிவிலாற்றல், பேரருள்` என்பன. இவை முறையே, `சருவஞ்ஞதை, திருத்தி, அநாதிபோதம், சுவதந்திரதை, அனந்தசத்தி, அலுத்த சத்தி, எனவும் கூறப்படும். இவற்றோடு `தூய உடம்பு அல்லது விசுத்த தேகம், இயல்பாகவே பாசமின்மை அல்லது நிராமயம்` என்னும் இரண்டுங்கூட்டி எட்டுக்குணம்` என்றலே விரித்துக் கூறலாகலின், `நான்கு` என்றும் `ஆறு` என்றும் கூறுவன தொகுத்துக் கூறலாமாறு உணர்க. தெரிவாய குணம் - மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்துணரப் படுவனவாய குணம். அவை அஞ்சாவன `ஓசை, ஒளி, ஊறு, சுவை நாற்றம்` (சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம்) என்பன. ஐம்பெரும் பூதங்களே உலகிற்கு முதலென்பது யாவர்க்கும் எளிதின் அறியப் படுவதாகலின், அவற்றின் குணங்களாகிய இவற்றை மட்டுமே அருளிச் செய்தார். சமிதை - ஓம விறகு; அதனை ஒன்பது என்றும் பிறவாறுங் கூறுபவாயினும், `ஆல், அரசு, அத்தி, மா, வன்னி, என்பன சிறப்புடையனவாதல் நோக்கி, `அஞ்சு` என்றருளினார். எழுத்தை, `பதம்` என்றருளினார். ``வகரக்கிளவி`` (தொல்.எழுத்து. 81.) என்றாற்போல. அஞ்செழுத்து - திருவைந்தெழுத்து மந்திரம், `அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி`` (தி.7. ப.83. பா.1.) என்றருளியதுங் காண்க. கதி ஐந்தாவன. `மக்கள்கதி. விலங்கு கதி, நரக கதி, தேவ கதி` என்னும் நான்கனோடு, `பரகதி` என்னும் வீட்டு நிலையுங்கூடியன. `இவைகளை எல்லாம் வேதாகமங்களில் சொல்லி யருளினார்` என்க. எரி - சுடர் வடிவம். `எரியாய` என்பதன் ஈற்றில் உள்ள அகரம் விரித்தல். ``தாமரை`` என்றது. அன்பர்களது நெஞ்சத் தாமரையை, உள்ளமாகிய தாமரை மலரின்மேல் இறைவனைச் சுடர் உருவில் தியானிக்கும் தியானமுறையை, `தகர வித்தை` என. உபநிடதங்கள் சிறந்தெடுத்துக்கூறும் (அத யதிதமஸ்மிந் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம்... சாந்தோக்யம், பத்மகோச ப்ரதீகாசம் தஸ்யமத்யே வஹ்நிசிகா, தஸ்யாஸ் ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித - மகாநாராயணோபநிடதம்) திருவள்ளுவ நாயனாரும் இறைவனை ``மலர்மிசையேகினான்`` (குறள். 3.) என்று அருளிச் செய்தமை காண்க. `எரியையே தாமரை மலராகிய இருக்கையாக உருவகித்தருளினார்` என்றலுமாம்.